"100% வரி" இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு வரி போடுவேன்.. தடாலடியாக மிரட்டிய டிரம்ப்! என்ன காரணம்
வாஷிங்டன்: இந்தியா உட்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு வர்த்தகமும் செய்ய முடியாமல் தடை விதிக்கப்படும் என்றும் சாடியுள்ளார்.
பிரிக்ஸ் எனப்படுவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் ஏற்கனவே துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகியவை உறுப்பினர்களாகச் சேர விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில் டிரம்ப் இதுபோல கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டாலர்: சர்வதேச அளவில் இப்போதும் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலர் தான் உள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தகத்திற்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து வர்த்தகத்திற்கும் டாலர் தான் பயன்படுத்தப்படும். அதாவது நாம் ஜப்பானில் இருந்து மின்சாதன பொருட்களை வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் ஜப்பானுக்கு இந்திய ரூபாய் அல்லது ஜப்பானிய யென் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்த மாட்டோம். மாறாக அமெரிக்க டாலரிலேயே பணம் செலுத்துவோம்.
இதுபோல உலகில் எந்த இரு நாடுகளுக்குள் நடக்கும் வர்த்தகமாக இருந்தாலும் பொதுவாக டாலர் தான் பயன்படுத்தப்படும். கடந்த காலங்களில் பல சிக்கல்கள் வந்தாலும் அதைத் தாண்டி சர்வதேச வணிகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலரே இருக்கிறது. அதேநேரம் சர்வதேச நிதிய அமைப்பில் அமெரிக்காவின் இந்த ஆதிக்கம் உலகின் பல நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கரன்சி: இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் டாலருக்கு பதிலாக வேறு பொது கரன்சியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்து வருகின்றன. கடந்த அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "அமெரிக்கா தனது டாலரை கூட ஆயுதமாக்குகிறது. இது மிகப் பெரிய தவறு..
சர்வதேச அளவில் நாங்கள் வர்த்தகம் செய்யும் போது நாங்கள் ஒன்றும் டாலரை பயன்படுத்த மறுப்பது இல்லை. ஆனால், அமெரிக்கா தான் எங்களை டாலரை பயன்படுத்த விடாமல் முடக்கியுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
ரஷ்யா: குறிப்பாகச் சர்வதேச வங்கி நெட்வொர்க்கான SWIFTக்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்க வேண்டும் என்தை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்துகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு SWIFTஇல் இருந்து ரஷ்யா விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வதில் ரஷ்யா பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இதில் இருந்து தப்பவே ரஷ்யா புதிய முறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
டிரம்ப் மிரட்டல்: இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு கரன்சியை பிரிக்ஸ் பயணப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் அதை யாராவது செய்ய முயன்றால் அமெரிக்காவுடன் அவர்கள் எந்தவொரு உறவையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "பிரிக்ஸ் புதிய நாணயத்தை உருவாக்க மாட்டோம் அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியளிக்க வேண்டும். இல்லை என்றால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும். மேலும், அமெரிக்கா உடன் எந்தவொரு வர்த்தகத்தையும் செய்ய முடியாது" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications