டிரம்பின் மூக்கை உடைத்த மத்திய அரசு.. இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குள் வராதீங்க.. சுளீர் பதிலடி
வாஷிங்டன்: இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில் அதனை மத்திய அரசு நிராகரித்து டிரம்பின் மூக்கை உடைத்துள்ளது. இந்த உதவியை பிரதமர் மோடி நிராகரித்தது ஏன்? அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் எல்லையில் பிரச்சனை உள்ளது. நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் உள்ள சில இடங்களை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே அவ்வப்போது பஞ்சாயத்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதன்பிறகு பெரிய மோதல்கள் எதுவும் நடக்காவிட்டாலும் கூட சீனா நம் நாட்டின் சொந்த பகுதிகளுக்கு உரிமை கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதனால் இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில் தான் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்தியா தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல் இந்தியாவின் படைபலத்தை அதிகரிக்க எஃப் 35 ரக போர் விமானத்தை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் ஆஃபர் செய்தார்.
அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளை மாளிகையில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதில் இந்தியாவில் ரோல் இருக்குமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இந்தியாவை புறக்கணிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார். அதேவேளையில் சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரது பதில் அமைந்து இருந்தது.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப், ‛‛ உலகில் சீனா மிகவும் முக்கியமான நாடு என்று நான் நினைக்கிறேன். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அவர்களால் (சீனா) உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன்'' என்று கூறினார். இதன்மூலம் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த இந்தியாவை விட சீனாவின் பங்கு தான் அதிகம் இருக்கும் என்று பொருள்படும்படி அவர் கூறியிருந்தார்.
அதோடு இந்தியா - சீனா மோதல் தொடர்பாக கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ‛‛இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல்கள் உள்ளன. இது தொடர்ந்து நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனையை முடிக்க உதவி செய்ய முடிந்தால் நான் உதவ தயாராக இருக்கிறேன். ஏனென்றால் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது நிறுத்தப்பட வேண்டும். சீனா, ரஷ்யா, இந்தியா, நாம் அனைவரும் இணைந்து செயல்பட முடியும்'' என்றார்.
இதன்மூலம் இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு காண டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டியில், ‛‛
எங்கள் அண்டை நாடுகளுடன் எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கிறது. இருப்பினும் இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் நாங்கள் எப்போதும் இருதரப்பு பேச்சுவார்த்தையை கடைப்பிடித்து வருகிறோம். இதில் பிற நாட்டு தலைவர்கள் தலையிடுவதை விரும்பவில்லை'' என்று கூறினார்.
இதன்மூலம் டொனால்ட் டிரம்பின் மூக்கை இந்தியா உடைத்துள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அப்போது அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு சப்போர்ட் செய்தது. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. அதோடு உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கியது. அதேபோல் சீனா, ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தது. இந்தியா மட்டும் தான் நடுநிலைமை வகித்தது. அதோடு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தொடர்ந்து இந்தியா பேசி வந்தது. நேரிலும், தொலபேசியிலும் இருநாட்டு தலைவர்களையும் அணுகிய பிரதமர் மோடி, ‛‛இது போருக்கான காலம் அல்ல. போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்'' என்று வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவுகக்கும் நம் நாட்டுக்கும் இடையே நெருங்கிய உறவு என்பது உள்ளது. பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயும் நல்ல நட்பு என்பது உள்ளது. இப்படியான சூழலில் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்த கேள்விக்கு டிரம்ப் நம் நாட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளதோடு உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த சீனாவின் உதவி பெரியதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் தான் இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை நாங்களே பேசி முடித்து கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று டொனால்ட் டிரம்புக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதிலடி கொடுத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications