அமெரிக்காவுடன் வர்த்தக பஞ்சாயத்து.. வெளியான குட் நியூஸ்! சாதித்து காட்டிய இந்தியா
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பஞ்சாயத்து நீடித்து வரும் நிலையில், இதற்கான முடிவு விரைவில் எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அடுத்து வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டு விஷயங்களில் மோதல் வெடித்தது. ஒன்று பரஸ்பர வரி. அதாவாது அமெரிக்காவிலிருந்து நம்மூருக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் அதிக வரியை விதிக்கிறோம். இதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும், டிரம்ப் அதை ஏற்க மறுக்கிறார். எனவே, "நீங்கள் எவ்வளவு வரியை போடுகிறீர்களோ, அவ்வளவு வரியை நாங்களும் போடுவோம்" என்று கூறி, நம்மூர் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25% வரியை போட்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை?
அதேபோல ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்பதால் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது காரணம். ஆக மொத்தம் பாகிஸ்தானை விட, சீனாவை விட இந்தியா மீதுதான் அதிக வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், பால்வளம் மற்றும் வேளாண் துறையில் அமெரிக்காவின் முதலீட்டை, அமெரிக்காவின் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதெல்லாம் வேலைக்கே ஆகாது என்று இந்தியா திட்டவட்டமாக மறுக்க, வரி விவகாரம் இப்போது வரை நீடித்து வருகிறது.
திருப்பூரில் உற்பத்தி பாதிப்பு
இதன் காரணமாக திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவது தடைபட்டிருக்கிறது. மட்டுமல்லாது தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மீன்கள் பாதி வழியில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதெற்கெல்லாம் வரிதான் காரணம். எனவே வரி விஷயத்தை முடிந்த அளவுக்கு பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளன.
நியாயமான வர்த்தகம்
இதற்காக மத்திய வர்த்த அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றிருந்தது. அங்கு அமைச்சர்கள், வர்த்தக துறை அதிகாரிகளை சந்திந்தித்து பஞ்சாயத்தை தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்த முயற்சி வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா தரப்பிலிருந்து பாசிட்டிவான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை டிரம்பும் உறுதி செய்திருக்கிறார். அமெரிக்காவும்-இந்தியாவும் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
இது குறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமெரிக்காவின் பதிலுக்காக நாங்கள் இப்போது காத்திருக்கிறோம். உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, நியாயமான வர்த்தகம் தொடர்பாக நாங்கள் என்ன பேச வேண்டுமோ அனைத்தையும் பேசிவிட்டோம். இனி அமெரிக்கா பதில் சொல்ல வேண்டியது மட்டுமே பாக்கி" என்று கூறியிருக்கிறார்.
சமரசம் செய்து கொள்ள மாட்டோம்
இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் வாஷிங்டனில் முடிவடைந்தது. பியூஷ் கோயல் இது குறித்து கூறுகையில், "இந்தியாவின் நலனுக்காக, சிறந்த வர்த்தக ஒப்பந்தத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். அதே நேரத்தில், இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளாது. நாங்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்திற்காக பணியாற்றி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications