இஸ்ரேல் மோதலுக்கு இடையே.. ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு கிடைத்த ஆதரவு.. இந்தியாவும் சப்போர்ட்
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. ஐநா சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
ஐக்கிய நாடுகள் பொது அவையில் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் இன்று கூடியது.

இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐநா பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்தியாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. 9 நாடுகள் எதிராக வாக்களித்தன.
பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பாக முடிவை எடுக்க உள்ளது. பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது. அண்மையில், பாலஸ்தீனத்தின் முழு நேர உறுப்பினராகும் முயற்சியை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த நிலையில் தற்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
அதேவேளையில், பயங்கரவாத நாட்டை தனது ரேங்கில் ஐக்கிய நாடுகள் அவை இணைத்து இருப்பதாக இஸ்ரேல் கடுமையாக சாடியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் ஹமாஸ் படையினர்.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் எனக் கூறி வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். தொடர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த தாக்குதல்களால் ஹமாஸ் படையினர் மட்டுமல்லாது ஏராளமான பாலஸ்தீன பொதுமக்களும் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த 7 மாத கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் அவையில், பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கப்பட ஆதரவு கிடைத்து இருப்பது முக்கியத்தும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications