“இதைச் செய்வது எனது கடமை..” டிரம்ப்பை தாக்க வந்தவர் சொன்ன காரணத்தை பாருங்க!
வாஷிங்டன்: டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் பங்கேற்றிருந்த, வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கொடுத்த வாக்குமூலம் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
வாஷிங்டனில் உள்ள 'வாஷிங்டன் ஹில்டன்' ஹோட்டலில் இந்த விருந்து நடைபெற்றது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் 2,600-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது?
விருந்து தொடங்கி உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், கோல் ஆலன் என்ற நபர், போலீஸ் பாதுகாப்பு மீறி துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்றார். அவர் ஒரு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரியை நோக்கிச் சுட்டார். நல்வாய்ப்பாக அந்த அதிகாரி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் டிரம்பை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். விருந்தினர்கள் அனைவரும் மேசைகளுக்கு அடியில் பதுங்கினர். பெரும் குழப்பத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் கோல் ஆலன் என்றும், இவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர், ஒரு ஷாட்கன், ஒரு கைத்துப்பாக்கி, சில கத்திகளுடன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கான காரணத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில், அமெரிக்கத் தலைவர்களின் செயல்பாடுகள் ஒரு குடிமகனாகத் தன்னையும் பாதிப்பதாக அவர் கருதியுள்ளார். தலைவர்களின் குற்றங்கள் என் கைகளில் படிவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே இதைச் செய்வது எனது கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு வழியில்லை
தற்போதைய அமெரிக்கத் தலைமையைத் துரோகிகள் மற்றும் குற்றவாளிகள் என்று அவர் சாடியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தவிர வேறு வழியில்லைஎன்று அவர் நியாயப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் மிக உயரிய பதவியில் இருப்பவர்கள் அனைவரையும் கொல்ல இவர் திட்டமிட்டிருக்கிறார். விடுதி ஊழியர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களைக் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், பாதுகாப்பு அதிகாரிகளை வேறு வழியில்லாத பட்சத்தில் மட்டுமே தாக்கத் திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடு
தாக்குதலுக்கு முன்பு அந்த இடத்தின் பாதுகாப்பை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சீக்ரெட் சர்வீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இங்கு ஒரு பாதுகாப்பும் இல்லை. என்னால் ஆயுதங்களுடன் எளிதாக உள்ளே நுழைய முடிகிறது என்று அவர் எழுதியுள்ளார். தான் ஒரு வெளிநாட்டு உளவாளியாக இருந்திருந்தால், இதைவிடப் பெரிய ஆயுதங்களுடன் உள்ளே வந்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசித்திரமான அறிக்கை
தனது பெற்றோர், சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் எனில், இவர் ஒரு ஆசிரியராகவோ அல்லது கல்வித்துறையில் இருந்தவராகவோ இருக்கலாம் எனத் தெரிகிறது.
"இந்தச் செயல் எனக்கே குமட்டலைத் தருகிறது. இதை நான் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். குழந்தைகளே, பள்ளிக்கூடத்திற்குச் சென்று நன்றாகப் படியுங்கள்" என்று விசித்திரமான முறையில் அந்த அறிக்கையை முடித்துள்ளார். இந்த அறிக்கை தற்போது அமெரிக்கா முழுவதும் விவாதங்களை தூண்டியிருக்கிறது.














Click it and Unblock the Notifications