பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்!
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ ரீதியிலான பல தற்காலிக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் இந்த போரில் முழுமையான ஒரு வெற்றியை அடைய முடியவில்லை. போர் தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள இந்தச் சூழலில், "டிரம்ப் இந்த போரில் தோற்றுக்கொண்டிருக்கிறாரா?" என்ற மிகப் பெரிய கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இந்த அதிரடிப் போரைத் தொடங்கியபோது, வெறும் 6 வாரங்களில் இது முடிந்துவிடும் என்று தான் டிரம்ப் கணக்குப் போட்டிருந்தார். அதற்கேற்றபடியே தொடக்கத்தில் காய்களையும் நகர்த்தினார். ஆனால், தற்போது காலம் இரண்டு மடங்காகக் கடந்த நிலையிலும், ஈரானின் பிடி தளரவில்லை.. ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான அதன் கட்டுப்பாடும், அணுசக்தி பிடிவாதமும் அப்படியேதான் நீடிக்கிறது!

டிரம்ப்
டிரம்பின் இந்த ஈரான் பாலிசி குறித்துக் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் முன்னாள் மத்திய கிழக்கு அமைதிப் பேச்சாளரான ஆரோன் டேவிட் மில்லர் சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது அவர், "மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. டிரம்ப் தனது குறுகிய கால இமேஜுக்காகத் திட்டமிட்ட இந்த போர், தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய தோல்வியாக மாறிக் கொண்டிருக்கிறது!" என்றார். உலகின் மிக வலிமையான ராணுவத்தைக் கையில் வைத்திருந்தும், ஈரானிடம் டிரம்ப் ரீதியாகத் திணறி வருவது, அவரது தனிப்பட்ட இமேஜுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது!
அணுஆயுத கனவு
ஈரானின் அணுஆயுதக் கனவை ஒழிப்பது, அதன் நட்புப் படைகளை முடக்குவது மற்றும் ஈரான் மக்களே அந்நாட்டு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட வைப்பதுதான் டிரம்பின் தொடக்கக்கால போர் இலக்குகளாக இருந்தன. ஆனால், இதில் எதுவும் நிறைவேறவில்லை. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பூமிக்கு அடியில் பத்திரமாகப் புதைத்து வைத்திருக்கிறது. அதனை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது என ஈரானின் உச்ச தலைவர் கூறிவிட்டார். சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை தங்களால் நினைத்தால் முடக்க முடியும் என்பதை வைத்தே இப்போது ஈரான் பேரம் பேசி வருகிறது
பிடுங்கப்படும் பதவி
இந்த தேவையற்ற போர் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் எங்கோ உச்சத்திற்குப் போய்விட்டது. டொனால்ட் டிரம்பின் அப்ரூவல் ரேட்டிங் சரிவு என உள்நாட்டிலும் பிரஷர் அதிகரித்துள்ளது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள மிட் டேர்ம் தேர்தல்களில் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கக் குடியரசு கட்சி தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. இந்த மிட் டேர்ம் தேர்தலில் தோற்றாலும் டிரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்து இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் கண்ட்ரோலை இழந்தால் டிரம்பால் விரும்பிய விஷயங்களைச் செய்ய முடியாது. பதவியில் இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு டிரம்ப் தள்ளப்படுவார்.
இதனால் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், ஒரு சுலபமான வெற்றியைப் பதிவு செய்யவும் டிரம்ப் தனது பார்வையை அடுத்ததாகக் கியூபா நோக்கித் திருப்பலாம் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணிக்கின்றனர். கடந்த ஜனவரி 3ம் தேதி வெனிசுலா அதிபரைக் கடத்தி, அங்கு அசுர வேகத்தில் ஆட்சி மாற்றம் செய்ததைப் போல ஈரானிலும் எளிதாக முடிந்துவிடும் என்று டிரம்ப் தவறாகக் கணக்கிட்டுவிட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகளே புலம்புகின்றனர்.
சமாளிப்பு
மறுபுறம், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் பேசுகையில், "ஆபரேஷன் எபிக் பியூரியின் அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்கா வெற்றிகரமாக முறியடித்துத் தாண்டியுள்ளது. இப்போது டிரம்ப் கையில் தான் எல்லாம் இருக்கிறது" என்றார். அதேபோல, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அரபு நாடுகள் சீனாவிடமிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கியுள்ளதாகவும் அதுவே ஒரு மிக முக்கியமான வெற்றி என்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications