நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜிம்மி கார்டர் காலமானார். 100 வயதான அவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக் கோளாறுகளால் காலமானார். ஜிம்மி கார்டர் 1977- ஆம் ஆண்டு முதல் 1981- ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பிறந்த இவர் எளிய பின்னணியில் இருந்து அமெரிக்க அதிபர் என்ற உச்சத்தை தொட்டவர். 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இவர் பதவி வகித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜிம்மி கார்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
கார்டர் மரணம் அடைந்தது குறித்து சிகிச்சை மையம் வெளியிட்ட அறிக்கையில், "பிளெய்ன்ஸ் நகரில் உள்ள வீட்டில் கார்டர் காலமானார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்தனர்" என்று தெரிவித்துள்ளது. கார்டரின் மகன் ஷிப் கார்டர் வெளியிட்ட அறிக்கையில், "எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டும் இல்லை. அமைதியை விரும்பிய அனைவருக்கும் ஒரு ஹீரோவாக விளங்கினார். மனித உரிமை ஆர்வலராகவும், சுயநலமில்லா அன்பையும் கொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மறைவை ஒட்டி அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த மனித நேயம் மிக்க தலைவரையும் நண்பரையும் இழந்துவிட்டேன் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக தீவிரமாக கார்டர் பணியாற்றினார்.
இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும் அவர் முக்கிய பங்காற்றினார். அதேபோல அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டார். குறிப்பாக ஈரானில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிணைக்கைதிகளாக அமெரிக்கர்கள் பிடிபட்டதை மீட்பதில் தோல்வி அடைந்தார். அதேபோல எண்ணெய் நெருக்கடி விவகாரங்களை கையாள்வதில் மோசமாக செயல்பட்டதாக கார்டருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.












Click it and Unblock the Notifications