தண்டனை கிடையாது.. சொந்த மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய பைடன்! "சட்ட விரோதம்" டென்ஷன் மோடில் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவருக்கு யாருக்கு வேண்டுமானாலும் பொது மன்னிப்பு தரும் அதிகாரம் இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படும். அதிபர் பதவியில் இருந்து விடைபெறுவோர் கடைசி நேரத்தில் பலருக்கு பொது மன்னிப்பை வழங்குவார்கள். அதன்படி அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் பைடன் தனது சொந்த மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன். அவர் மீது ஏற்கனவே சட்ட விரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தது, வரி செலுத்துவதில் தாமதம் உள்ளிட்ட விவகாரங்களில் வழக்கு இருக்கிறது.

பொது மன்னிப்பு: ஹண்டர் பைடன் போதைக்கு அடிமையாக இருந்து இப்போது மீண்டு வருகிறார். இந்தச் சூழலில் தான் ஜோ பைடன் தனது மகனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். இதற்கு முன்பு வரை குடும்ப உறுப்பினர்களுக்கு மன்னிப்பு தர மாட்டேன் எனச் சொல்லி வந்த பைடன், இப்போது யூ டர்ன் போட்டு தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவெடுப்பதில் தலையிட மாட்டேன் என்று சொன்னேன்.. என் மகன் மீது நியாயமற்ற முறையில் வழக்கு நடத்தப்பட்ட போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்.
வித்தியாசமாக: பொதுவாகப் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நபர்கள் வரி செலுத்தத் தவறினால்.. அவர்கள் வட்டி மற்றும் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டி இருக்கும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. ஆனால், எனது மகன் ஹண்டர் மீதான வழக்கு மட்டும் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளது ஹண்டர் எனது மகன் என்ற ஒரே காரணத்திற்காக இதுபோல கிரிமினல் வழக்கை நடத்தியுள்ளார்கள்.
கடந்த 5.5 ஆண்டுகளாகப் போதைப் பொருளில் இருந்து விலகி இருக்கும் ஹண்டரை மீண்டும் அதை நோக்கித் தள்ள இங்குப் பல முயற்சிகள் நடந்துள்ளன. அவர் மீது முறையற்ற விசாரணையும் நடந்துள்ளது. ஹண்டர் மீதான விசாரணையால் என்னையும் நிறுத்த முடியும் என நினைத்தனர்.
அமெரிக்க மக்கள்: நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் நீதி அமைப்பை நம்புகிறேன்.. ஆனால் எனது மகன் மீதான வழக்கில் அரசியல் இருக்கிறது. இதனால் நீதி நிலைநாட்டப்படவில்லை, இதன் காரணமாகவே நான் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒரு தந்தையாக அமெரிக்க அதிபராக நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
டிரம்ப்: அதேநேரம் பைடனின் இந்த முடிவை அங்குள்ள எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள டிரம்ப், இதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பைடன் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
என்ன வழக்குகள்: ஹண்டர் பைடன் மீது இரு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. முதலில் கலிபோர்னியா மாகாணத்தில் தொடரப்பட்ட வழக்கு.. சுமார் 1.4 மில்லியன் டாலர் வரியை அவர் செலுத்தவில்லை என்று வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாகவே பைடன் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் டென்வேரில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கும் இருக்கிறது. அதாவது 2018இல் அவர் போதைக்கு அடிமையாக இருந்த போது, சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வாங்கினார் என்பதே அந்த குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications