டிரம்ப் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு ரெடியா இருங்க.. மிக்சிகனில் ஜோ பிடனின் அனல்பறக்கும் பேச்சு
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து வெளியேற அமெரிக்கர்கள் ஓட்டு போட வேண்டும் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் நாளை மறுதினம் அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதங்கள் முடிந்து பிரச்சாரமும் ஓய்ந்தன.
அதிபர் டிரம்பும், ஜோ பிடனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனுக்கே ஆதரவு உள்ளது.
பிளவு
இந்த நிலையில் மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் நகரில் நேற்றைய தினம் இறுதி பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் போது ஜோ பிடன் பேசினார். அவர் பேசுகையில் கடந்த 4 ஆண்டுகளில் டிரம்ப் அமெரிக்காவையே பிளவுப்படுத்திவிட்டார்.
அதிபர்
அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டார். அவர் அதிபர் பதவியிலிருந்து வெளியேற அமெரிக்கர்கள் ஓட்டு போட வேண்டும். இந்த தேசத்தை பிளவுப்படுத்திய அதிபரின் பதவிக்கு நாம் 3 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். வெறும் 3 நாட்களில் நம் தேசத்தை பாதுகாக்கத் தவறிய டிரம்பின் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
வெறுப்பு
அமெரிக்கா முழுவதும் வெறுப்பை தூண்டிய இந்த டிரம்பின் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க 3 நாட்கள் போதும். லட்சக்கணக்கான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டார்கள். வரும் நாட்களில் மேலும் பலர் வாக்களிப்பார்கள்.
டொனால்ட் டிரம்ப்
இந்த நாட்டை மாற்றும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது. டிரம்ப் வெற்றி பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்வது பற்றி எனக்கு கவலையில்லை. இதன்மூலம் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முடியாது. டொனால்ட் டிரம்ப் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரம் இது என ஜோ பிடன் பேசினார்.