இந்திய இளைஞரை பலாத்காரம் செய்த பெண் உயர் அதிகாரி.. "படுக்கையில் தள்ளி அத்துமீறல்! பகீர் தகவல்
வாஷிங்டன்: உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் இனவெறி புகார்களைத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஜூனியர் அதிகாரி ஒருவரிடம், இந்த மேலதிகாரி அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்று ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase).. இந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் உயர் அதிகாரி லோர்னா ஹஜ்தினி (Lorna Hajdini) என்பவர் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கார்ப்பரேட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புகார்
சுமார் 15 ஆண்டுகளாக ஜேபி மோர்கன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 37 வயது லோர்னா ஹஜ்தினி மீது ஜூனியர் ஊழியர் ஒருவர் அதிர்ச்சிகரமான புகார்களைப் பட்டியலிட்டுள்ளார். 2024ம் ஆண்டு தொடங்கிய இந்த பாலியல் துன்புறுத்தல், ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அளித்துள்ள புகார்கள் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.
பாலியல் அத்துமீறல்
பாதிக்கப்பட்ட இளைஞரை "பிரவுன் இந்தியன்" என்று லோர்னா அழைத்ததாகவும், "நீ என்னுடன் இல்லையென்றால் உனக்குப் பதவி உயர்வு கிடைக்காது" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தனது பாலியல் இச்சைகளுக்குப் பணிய வைக்க, லோர்னா அந்த இளைஞருக்குத் தெரியாமல் 'ரூஃபீஸ்' எனப்படும் மயக்க மருந்தையும், மற்ற சில மருந்துகளையும் கொடுத்ததாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னுடன் நெருக்கமாக இல்லை என்றால் கேரியரையே அழித்துவிடுவேன் என்றும் விலைக்கு வாங்கிவிட்டேன் என்றும் லோர்னா மிரட்டியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை அந்த இளைஞர் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற லோர்னா, அங்கிருந்த அந்த இளைஞரின் மனைவியையும் மிகவும் ஆபாசமாகவும், இனவெறியோடும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அத்துமீறல்களின் போது அந்த இளைஞர் கதறி அழுதபோதும், "அழுவதை நிறுத்து... நீ ஒரு முட்டாள், உன்னை யார் நம்பப்போகிறார்கள்?" என்று லோர்னா ஏளனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
நடவடிக்கை இல்லை
இந்த விவகாரம் குறித்து 2025 மே மாதம் ஜேபி மோர்கன் நிர்வாகத்திடம் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். ஆனால், "எங்கள் விசாரணையில் இதில் உண்மையில்லை" எனக் கூறி வங்கி அந்தப் புகாரைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதைத் தொடர்ந்தே இப்போது அந்த இளைஞர் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞர் கூறுகையில், "லோர்னா இன்னும் அதே பதவியில் நீடிக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞரோ வேலையை இழந்து, மன ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிதைந்து போயுள்ளார்" என்றார். இதன் காரணமாக மன உளைச்சல் மற்றும் வருமான இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரி அந்த இளைஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
யார் இந்த லோர்னா ஹஜ்தினி?
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் பிசினஸ் ஸ்கூலில் (NYU Stern) பட்டம் பெற்ற லோர்னா, ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எக்ஸிகியூட்டிவ் எஜுகேஷன் முடித்தவர். மேலும், ஜேபி மோர்கனில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி, தற்போது 'லிவரேஜ்டு ஃபைனான்ஸ்' பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் மீது இந்திய இளைஞர் பாலியல் புகாரை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் தன் மீதான புகார்களை லோர்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications