எவ்வளவு உயரம் போனாலும் வேரை மறக்காத கமலா ஹாரிஸ்.. மேடையில் சட்டென அம்மா குறித்து பேசி நெகிழ்ச்சி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், இன்று அவர் தனது நாமினேஷனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார். அப்போது அவர் சட்டென தனது தாயார் குறித்து பேசும் போது எமோஷனல் ஆனார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலாவை அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்ய இப்போது அங்கே சிகாகோவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடக்கிறது. இதில் அதிபர் பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் என பலரும் கலந்து கொண்டனர்.
கமலா ஹாரிஸ்: இதற்கிடையே இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்யப்பட்ட நிலையில், அதை அவர் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் 2024 அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. உடல்நிலை காரணமாக 81 வயதான ஜோ பைடன் கடந்த மாதம் அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகினார்.
அதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கறுப்பினத்தவரான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கறுப்பினத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த அதிபர் தேர்தலில் அவர் வெல்லும்பட்சத்தில் அமெரிக்க அதிபராகும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார்.
அதிபர்: அந்த மாநாட்டில் பேசிய அவர், "கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றை தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும், உலகின் தலை சிறந்த தேசத்தில் வாழும் மக்கள் சார்பாக நான் இந்த நாமினேஷனை ஏற்றுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், தான் அமெரிக்காவின் எதிர்காலத்திற்காகப் போராட உள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் அதிபராக இருப்பேன்" என்றும் தெரிவித்தார்.
டிரம்ப் மீது தாக்கு: டிரம்பை விமர்சித்துப் பேசிய அவர், "நமது நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்வது மட்டுமே டிரம்பின் திட்டம்.. இந்தத் தேர்தல் நமது தேசத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதிகாரத்தை எல்லாம் தன்வசம் குவித்த டிரம்ப்பை கற்பனை செய்து பாருங்கள். அவர் அமெரிக்க அதிபரின் அதிகாரங்களை அவர் எப்படிப் பயன்படுத்துவார் என்று யோசியுங்கள். அவர் அதை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த நிச்சயம் பயன்படுத்த மாட்டார். சுயநலத்திற்காக நட்டுமே பயன்படுத்துவார்" என்றார்.
மேலும், தனது குடும்பத்தினர் குறித்துப் பேசுகையில், "எனது தந்தை டொனால்ட் ஜாஸ்பர் ஹாரிஸ் எப்போதும் அச்சமின்றி இருக்கக் கற்றுக் கொடுத்தார். எனது தாய் ஷியாமளா கோபாலன் தைரியமான ஒரு ஆள். அவரை போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. எங்களை வளர்த்தெடுக்க அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அநீதி நடக்கும் போது அதை பார்த்து சும்மா புகார் மட்டும் சொல்லக் கூடாது. அதைத் தடுக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று எனது அம்மா எப்போதும் சொல்வார். அதை எனது வாழ்நாள் முழுக்க நான் பின்பற்றி வருகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications