ஆபரேஷன் 'அப்ஸொலியூட் ரெசொல்வ்'! மதுரோவை கைது செய்ய அதிகாரம் இருக்கிறதா? சர்வதேச சட்டம் சொல்வது என்ன?
வாஷிங்டன்: நேற்று அதிகாலை, அதிரடியாக வெனிசுலாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கடத்தியுள்ளது. இப்படி செய்வதற்கு சர்வதேச சட்டத்தில் அனுமதி இருக்கிறதா? சட்டம் சொல்வது என்ன? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் அதிகாலை நடந்த இத்தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததுடன், தலைநகரம் முழுவதும் பெரும் பீதி பரவியது. வெனிசுலா அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.

ஐநா சாசனம்
இந்த கடத்தல் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, கைது செய்யப்பட்ட மதுரோ, போதைப்பொருள் பயங்கரவாத அமைப்பை வழிநடத்தி வருகிறார் என்றும் எனவேதான் கைது செய்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளது. ஆபரேஷன் 'அப்ஸொலியூட் ரெசொல்வ்' என்கிற நடவடிக்கையின் கீழ் மதுரோ கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த அமெரிக்கத் தாக்குதலின் சட்டபூர்வமான தன்மை குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது. சர்வதேச சட்ட வல்லுநர்கள் உட்பட பல விமர்சகர்கள், இத்தாக்குதல்கள் ஐ.நா. சாசனத்தை மீறி ஆக்கிரமிப்பு குற்றமாக அமையக்கூடும் என விமர்சித்திருக்கின்றனர்.
நாடாளுமன்ற அதிகாரம்
அமெரிக்கா உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த நடவடிக்கையை முக்கியமாக ஒரு சட்ட அமலாக்க நடவடிக்கை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இது அமெரிக்க நாடாளுமன்ற அதிக அதிகாரம் உள்ள இராணுவ நடவடிக்கை அல்ல என்றும் கூறியுள்ளார்.
என்னதான் பூசி மொழுகினாலும், ஒரு சுதந்திர நாட்டின் மீது ஆயுதமேந்திய படையெடுப்பு என்பது, சர்வதேச சட்டப்படி தீவிர சட்டக் கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
போர்க்குற்றம்
இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் ஒன்றுக்கொன்று தாக்கிக்கொண்டன. இதனையடுத்து இனியும் இப்படியான தாக்குதல்கள் நடக்கக்கூடாது என்பதால், புதிய விதிமுறைகளை ஐநா வகுத்திருந்தது. ஐ.நா. சாசனத்தின் பிரிவு 2(4), மற்ற நாடுகளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. அத்துடன், நாடுகளின் இறையாண்மையை மதிக்குமாறு கட்டாயப்படுத்துகிறது. ஐ.நா. போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஜியோஃப்ரி ராபர்ட்சன், இந்தத் தாக்குதல் பிரிவு 2(4)க்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்
அவர் இதை ஆக்கிரமிப்பு குற்றம், சர்வதேச சட்டத்தின் கீழ் உச்சபட்ச குற்றம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஐ.நா சபையின் அனைத்து உறுப்பினர்களும், தங்கள் சர்வதேச உறவுகளில் அச்சுறுத்தலை அல்லது பலத்தைப் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று சாசனத்தின் பிரிவு 2(4) குறிப்பிடுகிறது.
கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியர் எல்விரா டொமிங்குவெஸ்-ரெடோண்டோ, அமெரிக்க நடவடிக்கையை ஆக்கிரமிப்பு குற்றம் என்றும், சட்டவிரோதமாக பலத்தைப் பயன்படுத்துதல் என்று விமர்சித்துள்ளார். அதேபோல, உயர் சட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் சூசன் பிரே, "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றாலோ அல்லது சுய பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தாலோ மட்டுமே நியாயப்படுத்தப்படும். ஆனால், இந்த இரண்டு காரணங்களும் தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிப்படையாக இல்லை" என்று கூறியுள்ளார்.
சர்வதேச விதிமீறல்
சுய பாதுகாப்பு எனில், அமெரிக்கா மீது வெனிசுலா போரை அறிவித்திருந்தால், தற்போது அமெரிக்கா செய்திருப்பதை நியாயம் என்று சொல்லியிருக்கலாம். வெனிசுலா அப்படி எதுவும் செய்யவில்லை. அதேபோல, அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், போதைப்பொருள் கடத்தலுடன் மதுரோவை நேரடியாக இணைக்கும் எந்தத் தெளிவான ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படி பார்த்தாலும், என்ன கதை சொன்னாலும்.. அமெரிக்கா செய்தது சர்வதேச விதிமீறல் தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications