அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன?
வாஷிங்டன்: ஈரான் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த போருக்கு மைய காரணங்களில் ஒன்றாக இந்த யுரேனியமே இருந்த நிலையில், தற்போது அதனை ஈரானை விட்டுக்கொடுக்க தயாராகி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போரில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம்?
உலக வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாக நடைபெறுவதால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, எரிவாயு தட்டுப்பாட்டால் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை சூழல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்த போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் உதவியுடன் பேச்சுவர்த்தை நடைபெற்று வருகிறது. ஈரான் விரைவில் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவேன் என்று டிரம்ப் எச்சரித்து வருகிறார். இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போரில் முக்கிய திருப்பமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் முன்வந்துள்ளதாக அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இறுதிக் கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் விவகாரத்திலும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் ஒப்பந்தம் இறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்த நிலையில், மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் கூறினாலும், முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் டிரம்ப் வெளியிடவில்லை.
எனினும், அமெரிக்க அதிகாரிகள், அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கமான அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த புரிந்துணர்வு தற்போது பொதுவான அளவிலேயே இருப்பதாகவும், யுரேனியத்தை எவ்வாறு அகற்றுவது என்பது தொடர்பான துல்லியமான நடைமுறைகள் இன்னும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படி செயலிழக்க செய்வது?
ஈரான் தனது யுரேனிய கையிருப்பை எவ்வாறு மாற்றும், நீர்த்துப்போகச் செய்யும் அல்லது வேறு முறையில் செயலிழக்கச் செய்யும் என்பது குறித்த விரிவான ஆலோசனைகள், பரந்த அளவிலான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எட்டப்பட்ட பிறகு நடைபெறும் அடுத்த கட்ட அணு ஆயுத பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை ஈரான் வைத்துள்ளது என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. இந்த யூரோனியத்தை மேற்கொண்டு செறிவூட்டினால் பல அணு குண்டுகள் தயாரிக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications