14 வருடமாக கோமாவில் இருந்த பெண்.. கர்ப்பமாக்கிய ஆண் நர்ஸ்.. அமெரிக்காவில் அட்டூழியம்
கோமாவில் உள்ள பெண்ணை கற்பழித்த ஆண் நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: 14 வருஷமாக கோமாவில் இருந்த ஒரு பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆண் நர்சை போலீசார் கைது செய்து ஜெயிலில் தள்ளி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 29 வயதான பெண் ஒருவர் 14 வருடங்களாக கோமாவில் உள்ளார். இதனால் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார்.
இந்தநிலையில் திடீரென்று அவரது உடலில் மாற்றங்களை டாக்டர்கள் கண்டார்கள்.அதனால் அவரை செக் செய்து பார்த்தபோது, கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
கடந்த மாதம் 29-ந் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்று ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் இருந்து பெண்ணின் சொந்தக்காரர்கள் வரை எல்லாருமே அதிர்ச்சி அடைந்தார்கள்.
பெண்ணை யாராவது பலாத்காரம் செய்திருக்கலாம் என்று சந்தேகத்தில் போலீசாரிடம் விஷயத்தை சொன்னார்கள். இதையடுத்து ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் எல்லா ஆண்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த காமுகன் சிக்கி கொண்டார்.
ஆண் நர்சாக வேலைபார்க்கும் நாதன் சுதர்லாந்த் என்பவர்தான் பெண்ணை பாழாக்கியவர். அவருக்கு வயது 36. இதையடுத்து பீனிக்ஸ் நகர போலீசார் கேடு கெட்ட அந்நபரை கைது விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.