ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு..வயிற்றில் அடித்த மெட்டா! அடுத்தடுத்து வெயிட்டிங்கில் ‘ஜாம்பவான்’ கம்பெனிகள்
வாஷிங்டன்: உலக அளவில் சமூக வலைதளப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெட்டா நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் விரிவாக அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், விரைவில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அடுத்த சில மாதங்களில் மட்டும், சுமார் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் அந்நிறுவன ஊழியர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் உள்ளது.
அமெரிக்காவின் மென்லோ பார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனம், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 79,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 20 சதவீதம் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக வரும் மே மாதத்தில் மட்டும் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெட்டா பணிநீக்கம்
மெட்டா நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளது. இதனால் பல பணிகளை தானியக்க முறையில் (Automation) மேற்கொள்ள முடிவதால், மனிதவள தேவையும் குறைந்து வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என நிர்வாகம் கருதுகிறது என்கின்றன மெட்டா நிறுவன வட்டாரங்கள்.
ஏஐ வேலை இழப்பு
இதற்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மெட்டா நிறுவனம் சுமார் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட்டா மட்டும் அல்லாமல், உலகின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.
அமேசான் ஆரக்கிள்
குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் சுமார் 30,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 12,000 பேர் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அமேசான் நிறுவனத்திலும் அண்மையில் சுமார் 16,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் சுமார் 30,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு
அதேபோல் பிபிசி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிப்பதால் சுமார் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஐடி உள்ளிட்ட பல துறைகளில் மனிதவள தேவையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
ஐடி ஊழியர்கள்
இந்த ஆண்டிலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், உலகளவில் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய சவால்கள் உருவாகி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள். ஏஐக்கு ஏற்றவாறு மாறிக் கொள்வது, புதிய வாய்ப்புகளைத் தேடுவது போன்றவை தான் தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பளிக்கும் என்கின்றனர் ஐடி வல்லுநர்கள். மேலும், வரும் நாட்களில் ஏஐ காரணமாக வேலையிழப்பு சாதாரணமானதாகி விடும் என்றும் சொல்கின்றனர் ஐடி வல்லுநர்கள்.













Click it and Unblock the Notifications