குட் நியூஸ்.. உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும்.. மார்டனா அறிவிப்பு!
வாஷிங்டன்: உருமாறிய கொரோனா வைரஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், நல்ல விஷயம் என்னவென்றால், மார்டனா தடுப்பூசி இந்த வகை வைரஸை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனவைரஸ் 70 சதவீத வேகமாக பரவக்கூடியது என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அதிக அளவுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளதால் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பல நாடுகளிலும் களையிழந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் வடக்கு அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இது போன்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி இருக்கு
தடுப்பூசியில் இருந்து இதுபோன்ற வைரஸ் தப்பி விடுமா என்ற அச்சம் உலகம் முழுக்க மக்களிடம் இருக்கிறது. ஆனால் இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மார்டனா தடுப்பூசி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலுக்கு அளிக்கக்கூடியது தங்கள் தடுப்பூசி என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானம்
பைசர் தடுப்பூசி கம்பெனி நிர்வாகிகளும் தரப்பு மருந்துகளும் புதிய வகை வைரஸுக்கு எதிராக செயல்படக் கூடியவை என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பொதுவாகவே எந்த ஒரு வைரசாக இருந்தாலும் உருவத்தை மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் அதன் அடிப்படை மரபனு தன்மையில் மாற்றம் ஏற்படாதவரை ஏற்கனவே இருக்கக்கூடிய மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். புதிதாக ஒரு மருந்து உற்பத்தி செய்ய தேவை இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தேடும் பணி
இதனிடையே, டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் யாரெல்லாம் பிரிட்டனிலிருந்து திரும்பினார்களோ அவர்களை தேடும் பணியும், அவர்கள் பின்புலத்தை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.