டிரம்ப் நிர்வாகத்தில் கருப்பு ஆடு.. விமானி குறித்த விஷயத்தை லீக் செய்த நபருக்கு பகிரங்க வார்னிங்
வாஷிங்டன்: கடந்த 3ம் தேதி, ஈரான் எல்லைக்குள் வைத்து அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டது. இதிலிருந்து பாராசூட் மூலம் தப்பிய விமானிகளை மீட்க, அமெரிக்கா எடுத்த முயற்சிகள் குறித்த தகவல்கள் முன்னரே ஈரானுக்கு லீக் ஆனதாக டிரம்ப் கூறியிருக்கிறார். செய்தி ஊடகம் வழியாகத்தான் இந்த தகவல் பகிரப்பட்டதாகவும், அதை செய்தது யார் என்பது குறித்த விவரம் வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார். ஈரானில் நடந்த மிக முக்கியமான மீட்பு நடவடிக்கையின் தகவல்களை கசியவிட்ட நபரை அடையாளம் காண, அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுட்படிருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஈரான் தாக்கியதில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்த 2 பேரில் ஒருவர் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், இரண்டாவது விமானியை மீட்பதில் அதிக சிக்கல்கள் இருந்தன. முதல் மீட்புப் பணிக்குப் பிறகு, இரண்டாவது வீரர் இன்னும் ஈரானுக்குள்ளேயே பதுங்கியிருப்பது ஈரான் ராணுவத்திற்குத் தெரியாமல் இருந்தது.
ஆனால், இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதால், ஈரான் படைகள் உஷாரடைந்தன. இது அந்த வீரரின் உயிருக்கும், அவரை மீட்கச் சென்ற அமெரிக்கப் படைகளுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது.
தகவலை வெளியிட்ட ஊடக நிறுவனத்திற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்தத் தகவலைக் கொடுத்த நபர் யார் என்பதை ஊடகம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டு வருகிறார். தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த ரகசியத்தை கசியவிட்ட நபர் மற்றும் அதை வெளியிட்ட பத்திரிகையாளர், ஆதாரத்தைக் கூறாவிட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தகவல் கசிவுக்குக் காரணமானவரை ஒரு மனநோயாளி என்று அவர் சாடியுள்ளார்.
தகவல் கசிந்ததால் ஏற்பட்ட சவால்களையும் மீறி, அந்த வீரரை மீட்க 155 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதில் குண்டுவீச்சு விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications