வேக்சினை காட்டிலும்.. இயற்கை நோயெதிர்ப்பு சக்தி அதிக பலன் கொடுத்தது.. பரபரப்பை கிளப்பிய புதிய ஆய்வு
வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக வேக்சின் போட்டுக் கொண்டவர்களின் தடுப்பாற்றல் மற்றும் இயற்கையாக உண்டான தடுப்பாற்றல் குறித்த புதிய ஆய்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. உலகின் அனைத்து நாடுகளும் இந்த கொடிய கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Tamilnadu Rains: இந்த 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. 5 மாவட்டங்களில் வாட்டும் குளிர்
முதலில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட உடன் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா வேக்சினால் உயிரிழப்புகள் குறைந்துள்ள போதிலும் கொரோனா முடியவில்லை.
புதிய ஆய்வு
இதனிடையே கொரோனா வைரஸ் குறித்தும் வேக்சின் கொடுக்கும் தடுப்பாற்றல் குறித்தும் உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தடுப்பாற்றல் குறித்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் டெல்டா பரவல் ஏற்பட்ட சமயத்தில் வேக்சின் போட்டுக் கொண்டவர்களைக் காட்டிலும் கொரோனாவில் இருந்து இயற்கையாகக் குணமடைந்தவர்களின் உடலில் தடுப்பாற்றல் அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய விவாதம்
இந்த ஆய்வு முடிவுகள் வேக்சின் தடுப்பாற்றல் மற்றும் இயற்கையாக உருவாகும் தடுப்பாற்றல் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதேநேரம், வேக்சின் போடப்பட்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அட்மிட் ஆவது, நீண்ட கால பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு வேக்சின் போடாதவர்கள் மத்தியில் அதிகமாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். எனவே, விரைவாக வேக்சின் போடுக்கொள்ளுப்படி அறிவுறுத்தியுள்ளனர்.
வேக்சின் முக்கியம் தான்
இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுகையில், "கொரோனா உட்பட அனைத்து வகையான வைரஸ்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தடுப்பூசி மற்றும் முந்தைய நோய் பாதிப்பில் இருந்து பெறப்படும் தடுப்பாற்றலும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். அனைத்தையும் கருத்தில் வைத்துப் பார்க்கும் போது வேக்சின் தான் இப்போதும் கொரோனாவுக்கு எதிரான முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது" என்றார்.
ஆய்வு முடிவு
ஒமிக்ரான் பரவல் ஏற்படுவதற்கு முன்பு, அதாவது 2021 மே 30 முதல் நவம்பர் 30 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா கொரோனா உச்சமடையும் முன்பு இயற்கையாகத் தோன்றும் தடுப்பாற்றலை விட வேக்சின் தான் அதிகம் தடுப்பாற்றலை வழங்கியது. ஆனால் ஜூன் பிற்பகுதி டெல்டா கொரோனா உச்சமடைந்த பின்னர் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
Recommended Video
குறைவு
அதாவது வேக்சின் போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் டெல்டா பாதிப்பு 5 முதல் 6 மடங்கு குறைவாக இருந்துள்ளது. அதேநேரம் இதற்கு முன்பு கொரோனாவில் இருந்து குணமடைந்து வேக்சின் போடாத நபர்களுக்கு 15 முதல் 29 மடங்கு வரை குறைவான கொரோனா பாதிப்பே ஏற்பட்டுள்ளது. அதாவது 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டவர்களைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு இருந்துள்ளது.
இஸ்ரேல்
மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் விகிதமும் இதே அளவில் இருந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்விலும் டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சினால் கிடைக்கும் தடுப்பாற்றலை விட இயற்கையாகக் கிடைக்கும் தடுப்பாற்றல் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அனைத்து உருமாறிய கொரோனா வகைகளுக்கும் இந்த முடிவுகள் பொருந்தாதது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.