வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசாக்களில் கடந்தாண்டு டிரம்ப் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தார். இது சர்வதேச அளவில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்யும் வகையில் புதிய WISA மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவில் பல லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்ப் கடந்தாண்டு ஹெச்-1பி விசா முறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். இது இந்தியர்கள் உட்பட ஹெச்-1பி விசா ஹோல்டர்களை கடுமையாகப் பாதிப்பதாக இருந்தது.

புதிய மசோதா
இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய WISA மசோதா இந்தியத் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 2025இல் H-1B வீசா திட்டத்தில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளைத் தளர்த்தும் வகையில் இந்த Welcoming International Success Act எனப்படும் WISA கொண்டு வரப்பட்டுள்ளது.
பலன் தரும்
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த போனி வாட்சன் கோல்மேன் இதை அறிமுகப்படுத்தினார். இவர் தற்போது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராவார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆளும் தரப்பு என்றில்லை.. எந்தவொரு எம்பி வேண்டும் என்றாலும் சட்டத்தைக் கொண்டு வரலாம். அதன்படியே போனி வாட்சன் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் மட்டும் அங்கு நிறைவேறினால், இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான H-1B விசா நபர்களின் கட்டுப்பாடுகள் குறையும். கடந்தாண்டு டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதே இந்த WISA மசோதாவின் நோக்கமாகும்.
டிரம்ப் ரூல்ஸ்
கடந்தாண்டு டிரம்ப் தரப்பு விசா விவகாரத்தில் பல்வேு மாற்றங்களைக் கொண்டு வந்தது. முதலில் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஊழியர்களுக்குக் கடுமையான ஊதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதிக ஊதியம் பெறும் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்த ஊதியத்தை அடிப்படையிலான லாட்டரி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெச்-1பி விசா முறையைப் பயன்படுத்தி அமெரிக்கர்களுக்குப் பதிலாகக் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரை அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு நல்லது
இருப்பினும், சர்வதேச அளவில் திறமையான ஊழியர்களை நம்பி இருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பெரிய சிக்கலைக் கொடுத்தது. பல தடைகளை உருவாக்கியது. இந்த தடைகளை நீக்குவதே இந்த WISA சட்டத்தின் நோக்கமாகும். இந்த சட்டம் நேரடியாகவே இந்தியர்களுக்கே பெரும் பயன் தருவதாக இருக்கும். ஏனென்றால் H-1B விசா திட்டத்தில் இந்திய ஐடி வல்லுநர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான ஒட்டுமொத்த H-1B விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதனால் ஹெச்-1பி விசாவில் வரும் எந்தவொரு மாற்றமும் இந்தியர்களுக்கு பெரும் பலனைத் தருவதாக இருக்கும். தற்போது சுமார் 7.3 லட்சம் H-1B விசா ஹோல்டர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 5.5 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இந்த புதிய சட்டம் பெரியளவில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications