தொழில்துறையில் சாம்பியன்.. தமிழகத்தை புகழ்ந்த சர்வதேச ஊடகம்! சென்னை மட்டுமல்ல கோவை, சிவகாசி அடடே செம
வாஷிங்டன்: பிரபல அமெரிக்கச் செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் தொழில்துறையில் தமிழ்நாடு சாம்பியனாக இருப்பதாகப் பாராட்டிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் இதற்காகச் சென்னையில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பல முதலீடுகள் கிடைத்தது.

அதேபோல முதல்வர் ஸ்டாலின் புதிய முதலீடுகளை ஈர்க்க இப்போது ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் தமிழ்நாடு தொழில்துறையில் சாம்பியனாக இருப்பதாகப் பாராட்டிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது..
புகழாரம்: அந்த கட்டுரையில், இந்திய மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாட்டில் சுமார் 43% பெண் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகையைத் தமிழ்நாடு தனது வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. 7.2 கோடி மக்கள்தொகையை மட்டுமே கொண்ட தமிழ்நாடு, ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையைத் தவிர்த்து வேறு வழிகளில் தமிழ்நாடு பயணித்து வெற்றி பெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எலக்டிரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் சீனா தான் டாப் இடத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அந்த கட்டுரையில், ஆனால், எலக்டிரானிக் பொருட்களின் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்க ஆரம்பித்தது. இதனால் நொய்டா உள்ளிட்ட இடங்களில் புதிய தொழிற்சாலைகள் வந்தன.
தமிழ்நாடு: ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற மானியங்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படவில்லை.. இங்கு மாநிலத்தில் சிறந்த கல்வி, வலுவான போக்குவரத்து கட்டமைப்பு, பொறியியல் பட்டதாரிகள் என்று தேவையான அனைத்தும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலமாக ஐபோன் உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் தான் முக்கிய பங்குவகித்தது.. தனது 99 சதவீத ஐபோன் உற்பத்தியை பாக்ஸ்கான் சீனாவில் மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது அவர்கள் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையை விரிவுபடுத்தி வருகிறார்கள். சீனாவில் இருப்பதைப் போலவே தங்கள் தொழிலாளர்கள் தங்கப் பிரமாண்டமான கட்டிடங்களை அப்பகுதியில் கட்டி வருகின்றனர்.. மொத்தம் 13 கட்டிடங்களைக் கட்டி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்: தமிழகத்தின் சில பகுதிகள் ஏற்கனவே பல்வேறு தொழில்துறையில் சாம்பியனாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் கார் பாகங்கள் உற்பத்தியின் தலைநகரான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல தொழிற்சாலைகள் உள்ளன.
கோவை பகுதி டை-காஸ்டிங் மற்றும் பம்ப் உற்பத்தியில் நிபுணத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. மேலும் நாட்டின் மிகப்பெரிய தீப்பெட்டி உற்பத்தியாளராகச் சிவகாசியில் இருக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐபோன் போன்ற உயர்தரப் பொருட்கள் உற்பத்தி இந்தியாவில் அதிகரிப்பது வியக்க வைக்கிறது. டி-ஷர்ட்கள் அல்லது ஸ்னீக்கர்கள் உற்பத்தியில் வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இந்தியா சரியான போட்டியைத் தராத நிலையில், இப்போது எலக்டிரானிக் உற்பத்தியில் தான் சரியான போட்டியைத் தருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications