நடக்க கூட முடியல.. நியூயார்க் நீதிமன்றத்தில் தட்டு தடுமாறி நடந்த வெனிசுலா அதிபர் மதுரோ! அடுத்து என்ன
வாஷிங்டன்: வெனிசுலா அதிபரை அமெரிக்கப் படைகள் கடந்த சனிக்கிழமை கைது செய்து நாடு கடத்தியது. இதற்கிடையே அவர் இப்போது பலத்த பாதுகாப்போடு நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தள்ளாடியபடி அவர் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் மீதான வழக்குகள் இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சுமார் 15 ஆண்டுகள் வெனிசுலா நாட்டை ஆட்சி செய்த மதுரோ இப்போது அமெரிக்கப் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார். கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படைகள் அவரை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தியிருந்தது. அவர் மீதான வழக்குகள் அமெரிக்காவில் நடைபெறும் எனக் கூறப்பட்டு இருந்தது.

நியூயார்க் நீதிமன்றம்
இந்தச் சூழலில் தான் அவர் சற்று நேரத்திற்கு முன்பு நியூயார்க் வளாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இன்றைய தினம் அமெரிக்க நீதிமன்றத்தில் முதன்முறையாக அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். டிரம்ப் அரசு அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகள் நடைபெறும்..
நடக்க முடியல
கைதிக்கான காக்கி சீருடையில், கையில் விலங்கிடப்பட்டு அவர் சிறை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவரால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. தட்டுத் தடுமாறியே நடக்கிறார். பலத்த பாதுகாப்போடு, இரு அமெரிக்க வீரர்கள் அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நியூயார்க் நீதிமன்றத்திற்கு மதுரோவை அழைத்து வரும் பயணம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 7:15 மணிக்குத் தொடங்கியது. பலத்த போலீசார் பாதுகாப்போடு கூடிய வாகன கான்வாய் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். ப்ரூக்ளின் சிறையிலிருந்து மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு ஆயுதமேந்திய பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்ட அவர்கள், அங்கிருந்து நீதிமன்ற வளாகத்தை அடைந்தனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
மதுரோ மீது போதைப் பொருள் கடத்தல் பிரதானக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. அத்தோடு சேர்த்து தனது அதிபர் பதவியைத் தக்கவைக்க அவர் வன்முறையைப் பயன்படுத்தியதாகவும் குற்றங்களைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக வெளியான 25 பக்க குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மதுரோ, அவரது மனைவி மற்றும் அவருடைய கூட்டாளிகள் பல ஆயிரம் டன் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு அனுப்பப் பல்வேறு கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டுகிறது. மேலும், தனது அரசுக்குப் பணம் செலுத்தாதவர்களை அல்லது எதிராக இருந்தவர்களையும் கடத்தி, தாக்கி, கொலை செய்யவும் மதுரோ உத்தரவிட்டதாக அந்தக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனைவி மீதான குற்றச்சாட்டு
கடந்த 2007இல் ஒரு மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கும் வெனிசுலா தேசியப் போதைப்பொருள் தடுப்பு அலுவலக அதிகாரிகளுக்கு இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பல லட்சம் டாலர்கள் லஞ்சமாகப் பெற்றதாக மதுரோவின் மனைவி சிலியா ஃபுளோரஸ் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த வழக்குகள் இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி திங்கள் நள்ளிரவில் இந்த வழக்குகள் நடைபெற உள்ளன.
நீதிமன்றத்தில் என்ன நடக்கும்
இந்த வழக்கு விசாரணையின்போது மதுரோவின் வழக்கறிஞர்கள் அவரது கைது சட்டவிரோதமானது என வாதிட உள்ளனர். ஓர் இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் அமெரிக்காவால் இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது என்பதை மதுரோ தரப்பு வாதமாக முன்வைக்கவுள்ளது. இருப்பினும், 2024ல் நடந்த வெனிசுலா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் சூழலில், அமெரிக்கா அவரை வெனிசுலாவின் சட்டப்பூர்வமான தலைவராக அங்கீகரிக்கவில்லை. எனவே, இந்த வாதம் பெரியளவில் எடுபடாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications