Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு? எல்லாம் ஓகே.. ஆனா ஒரு பிரச்சனை இருக்கே! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் சொல்லி வரும் நிலையில், இந்தப் போர் நிறுத்தம் வந்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், அவருக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. காரணம் டிரம்ப் தான்!

Nobel Peace Prize 2025 Trump Nominated But Will he get the prestigious award What is the reality

அமைதிக்கான நோபல் பரிசு

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதை டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறது. பல உலக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காகத் தனக்கு இந்தப் பரிசை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில் தனக்கு நோபல் பரிசை வழங்கவில்லை என்றால் அது ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் அவமானம் என்ற ரேஞ்சிற்கு பேசினார். உண்மையில் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

2025 அமைதிக்கான நோபல் பரிசுக்கு 338 பேர் பரிந்துரைக்கப்பட்டதை நார்வே நோபல் குழு உறுதி செய்துள்ளது.. இதில் 244 தனிநபர்களும் 94 அமைப்புகளும் அடங்கும். பொதுவாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் ரகசியமாக இருக்கும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதைப் பலரும் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ஏன் முக்கியம்?

அமைதிக்கான நோபல் பரிசு உலகின் மிக மதிப்புமிக்க சர்வதேச விருதுகளில் ஒன்றாகும். சுவீடன் தொழிலதிபர் ஆல்பிரட் நோபலின் விருப்பத்தின்படி 1901 முதல் இது வழங்கப்பட்டது. நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவம், ராணுவத்தைக் குறைப்பது, அமைதியை உருவாக்குவது ஆகியவற்றில் சிறந்த பணிகளைச் செய்தவர்களுக்கே எப்போதும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.

நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு இதை நிர்வகிக்கிறது. பரிந்துரைகள் வந்த பிறகு தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷார்ட் லிஸ்ட் ஆன நபர்கள் குறித்து இந்தக் குழுவும் துறைசார்ந்த வல்லுநர்களும் ஆய்வு செய்வார்கள். பிறகு பெரும்பான்மை அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது இறுதி செய்யப்படும். மற்ற நோபல் பரிசுகள் சுவீடனில் வழங்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி நார்வேயின் ஓஸ்லோவில் வழங்கப்படுகிறது.

டிரம்ப்பிற்குக் கிடைக்குமா?

இந்தாண்டு ட்ரம்ப்பை பல தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட், அமெரிக்க எம்பி படி கார்ட்டர் மற்றும் ஸ்வீடன், நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் டிரம்ப்பை பரிந்துரைத்தனர்.

வழக்கமாகப் பரிந்துரைகள் எல்லாம் பிப்ரவரி 1க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், நெதன்யாகு மற்றும் பாகிஸ்தான் அரசு பிப்ரவரி 1க்கு பிறகே டிரம்ப்பைப் பரிந்துரைத்தனர். இதனால் அவை தகுதியற்றவை ஆகின்றன. இருப்பினும், வேறு பலரும் டிரம்ப்பைப் பரிந்துரைத்துள்ளதால் அவர் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் பரிந்துரைத்தாலே விருது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. தேர்வு மிகக் கடுமையாக இருக்கும்.

டிரம்ப் சொல்வது என்ன?

உலகின் பல்வேறு மோதல்களைத் தான் நிறுத்தியுள்ளதாக டிரம்ப் சொல்கிறார். இதைச் சுட்டிக்காட்டியே அவர் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்கிறார். குறிப்பாக இன்றைய தினம் கூட அவர் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் முடிவுக்கு வருவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும், டிரம்ப்பிற்கான லாபியும் பெரியது. எனவே, அவர் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என நம்புகிறார்.

இருப்பினும், அதற்கான வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பு டிரம்ப் பெரிதாக எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை.. இதனால் இந்தாண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு குறைவாம். அடுத்தாண்டு கிடைக்கச் சற்று வாய்ப்பு இருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்.

சிக்கல் என்ன?

அதேநேரம் வேறு சில விஷயங்கள் டிரம்ப்பை இந்த விருதுக்குத் தகுதியற்றவராக மாற்றுகிறது. இது தொடர்பாக ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நினா கிரெகர் கூறுகையில், "உலக சுகாதார அமைப்பு மற்றும் காலநிலை குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தவர் டிரம்ப் தான். மேலும் அவர் வர்த்தகப் போரையும் ஆரம்பித்துள்ளார். அமைதியை விரும்பும் ஒருவர் இதையெல்லாம் செய்ய மாட்டார்" என்றார்.

மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அதைச் சிறிது காலம் மட்டும் நிறுத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதாக சாத்தம் ஹவுஸ் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் சமீர் புரி கூறினார். இது மட்டுமின்றி இப்போது டிரம்ப்பிற்கு விருது வழங்கப்பட்டால் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்ததாகப் பெயர் வரும் என்பதால் அவருக்கு வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

யாருக்கு கிடைக்கும்?

இந்த ஆண்டு இவருக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் எனத் தெளிவாகச் சொல்ல முடியாது. இருப்பினும், சூடானின் அவசரக்காலப் பதில் அறைகள் (Emergency Response Rooms) அமைப்பு, யூலியா நவால்னாயா (விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மனைவி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அலுவலகம் (The Office for Democratic Institutions and Human Rights), ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளது.

மேலும், ஐநா நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம் (பாலஸ்தீனிய அகதிகளுக்கான நிவாரண நிறுவனம்), ஐநா அகதிகள் உயர் ஆணையர், சர்வதேச நீதிமன்றம், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists) ஆகியோருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+