"வெட்கமே இல்லையா.." முனீரை அமெரிக்காவிலேயே சுற்றி வளைத்த பாகிஸ்தானியர்கள்! கடைசி வரை விடவே இல்லை
வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அதன் தலைமை முனீருக்கும் உள்நாட்டிலேயே எதிர்ப்பு இருப்பது பலருக்கும் தெரியும். இதற்கிடையே முனீர் இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கும் கூட முனீருக்கு எதிராக அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக நடந்த போராட்டம் பாகிஸ்தானுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. அதில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது. அப்போது இந்தியா பாகிஸ்தான் மோதல் மோசமாகப் பாகிஸ்தான் ராணுவ தளபதியான முனீர் எடுத்த நடவடிக்கைகளே முக்கிய காரணமாக இருந்தது.

பாகிஸ்தான்
முனீர் உத்தரவைத் தொடர்ந்தே பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் எல்லைப் பகுதிகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. அதுவே நிலைமை மோசமாக்கியது. மேலும், மோதலில் தோற்ற பிறகும் கூட முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு எல்லாம் கொடுத்தார்கள். இப்படி போலியான ஒரு இமேஜ்ஜை உருவாக்கப் பாகிஸ்தான் தீவிரமாக முயன்றாலும் முனீருக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் போராட்டம்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் இப்போது அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு வாஷிங்டனிலேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் வம்சாவளியினரும் முனீர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே கூடி பாகிஸ்தானில் "உண்மையான ஜனநாயகம்" மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், முனீர் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது "முனீர், நீ ஒரு கோழை", உனக்கு வெட்கம் இல்லையே.. சர்வாதிகாரி நீ.!, பாகிஸ்தானியர்களைக் கொல்லும் கொடூரர் உள்ளிட்ட கோஷங்களை அங்குத் திரண்டுள்ளவர்கள் எழுப்பினர். கட்டிடத்தில் அவர்கள் நுழைய முயன்றபோது அவர்களை அதிகாரிகள் தடுத்தனர். இதனால் அங்குச் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அசிம் முனீருக்கு எதிராகப் போராட்டம்
அதேபோல மற்றொரு வீடியோவில் வாஷிங்டனில் முனீருக்காக வைக்கப்பட்ட எலக்ட்ரானிக் விளம்பரப் பலகை குறித்த விவரங்கள் இருக்கிறது. அதில் அசிம் முனீர் நீ ஒரு கொலையாளி.. துப்பாக்கிகள் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் இறந்துவிடும் உள்ளிட்ட வாசகங்களுடன் முனீர் போட்டோவுடன் இருந்தது.
இந்த போராட்டத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களே நடத்தியுள்ளனர். குறிப்பாகப் பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் இந்த போராட்டத்தை நடத்தினர். தற்போதுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பிடிஐ கட்சியினர், முனீர் வருகை குறித்த அறிவிப்பு வரும் முன்பே வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் முனீர்
அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முனீர் ஐந்து நாள் பயணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தில் அவர் முக்கியமான தலைவர்களையும் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த ராணுவ அணிவகுப்பிற்கு முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் செய்திகளைப் பரப்பியது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இருப்பினும், பின்னர் முனீரை ராணுவ அணிவகுப்புக்கு அழைக்கவில்லை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது. ராணுவ அணிவகுப்பு நடைபெற்ற நாளில் முனீர் வாஷிங்டனில் இருந்தபோதிலும், அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications