"இந்தியாவை எங்களால் சமாளிக்க முடியல.. காப்பாத்துங்க.." பயந்துபோய் அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான்!
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிரான மோதலின்போது பாகிஸ்தான் மிக மோசமான இழப்புகளை சந்தித்திருந்தது. இதற்கிடையே இந்தியாவை சமாளிக்க தனக்கு ஆயுதம் தேவை என்று பாகிஸ்தான் வெளிப்படையாகவே அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் அமைச்சர் முசாடிக் மாலிக் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக மிக மோசமாக இருப்பது எல்லாருக்கும் தெரியும். பாக். பொருளாதாரம் தடுமாறும் நிலையில், ஒவ்வொரு ஐஎம்எஃப், ஆசிய வளர்ச்சி வங்கி என ஒவ்வொரு அமைப்பிடமும் பாகிஸ்தான் கையேந்தி வருகிறது. அதேநேரம் உதவியாகப் பெறும் நிதியைப் பாகிஸ்தான் வளர்ச்சிக்குச் செலவு செய்ய மறுத்து வருவது பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியே வருகிறது.

உதவி கேட்ட பாகிஸ்தான்
இதற்கிடையே இப்போது அமெரிக்காவிடம் சென்று பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. அதுவும் ராணுவ உதவியைக் கேட்டுள்ளது. இந்தியாவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள ஆயுதங்களைத் தருமாறு அமெரிக்காவிடம் போய் பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. இதற்காக 13 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு, நேரடியாக அமெரிக்கா சென்று அதிநவீன ஆயுதங்களை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களுக்கு விமான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்களை விற்பனை செய்யுமாறு பாகிஸ்தான் அமைச்சர் முசாடிக் மாலிக் நேரடியாக அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நேர் முரண்
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் மோதலில், இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் சரணடைந்தது. ஆனால், உள்நாட்டில் ஏதோ மோதலில் வெற்றி அடைந்தது போலப் பாகிஸ்தான் பொய் செய்திகளைப் பரப்பி, போலியான வெற்றியைக் கொண்டாடியது. ஆனால், இப்போது தங்களிடம் ஆயுதம் இல்லை.. அமெரிக்கா தான் ஆயுதம் தர வேண்டும் என கிட்டதட்ட வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோரிக்கை
இது தொடர்பான முசாடிக் மாலிக் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் மாலிக், "இந்தியா 80 விமானங்களுடன் 400 ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவற்றில் சில அணு ஆயுதங்களைச் சுமக்கும் திறன் கொண்டவை. எங்களிடம் வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லையென்றால், நாங்கள் அழிந்து போயிருப்போம். இந்தியா பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டதாக இருந்தது. எனவே, அந்த தொழில்நுட்பங்களை எங்களுக்கும் கொடுங்கள், நாங்கள் உங்களிடமிருந்தே வாங்குகிறோம்" என்று அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் பேசியிருந்தார்.
இந்தியாவை பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்க இந்தியா எம்பிக்கள் அடங்கிய குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பியிருந்தது. அதைப் பார்த்து பாகிஸ்தானும் அதேபோல குழுவை உருவாக்கி உலக நாடுகளுக்கு அனுப்பியது. அதன்படி மாஜி வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் தான் மாலிக் இடம் பெற்றிருக்கிறார். அவர்கள் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் எம்பிக்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் பதற்றம்
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், அதை முறியடித்த இந்தியா, பாகிஸ்தான் மீது சரமாரி தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தாக்கவே பாகிஸ்தான் திணறிய நிலையில், இந்திய பாதுகாப்புப் படை பாகிஸ்தான் ராணுவ தலைமையிடமான ராவல்பிண்டியையே தாக்கியது.
இதை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதி செய்திருந்தார். இது தொடர்பாக முன்னதாக ஷெரீப் கூறுகையில், "இந்தியா பிரம்மோஸ் ஏவுகணை மூலம் ராவல்பிண்டி உட்பட பாகிஸ்தானின் பல பகுதிகளைத் தாக்கியது.. இந்திய ஏவுகணைகள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் மற்றும் பிற முக்கிய தளங்களைத் தாக்கியது" என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications