சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால்.. ஜனநாயகத்தை தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது..டிரம்புக்கு, மோடி கண்டனம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தபோது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் பலியாகிவிட்டார்.
6 மணி நேரமாக நீடித்த போராட்டத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. பிடனை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கியது.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் வெற்றி
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜோ பிடன் 306 இடங்களிலும் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர். எனினும் ஜோபிடன் வெற்றியை ஏற்க டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் தேர்தலில் முறைகேடு நிகழ்த்தியதாக ஆதாரமற்ற தகவல்களுடன் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்து அவற்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

வாக்குகள் எண்ணும் பணி
இந்த நிலையில் ஜோ பிடன் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக தேர்தல் சபை உறுப்பினர்கள் (Electoral College) தங்கள் வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடந்தது.அந்த வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்து வந்தன. இந்த வாக்குகள் எண்ணப்பட்டால் ஜோ பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதை தடுத்து நிறுத்த டிரம்ப் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

வன்முறை மூண்டது
அப்போது அங்கு நடந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு பெண் பலியானார். இதுவரை 13 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 மணி நேரமாக நீடித்த இந்த போராட்டத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. பிடனை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கியது.

மோடி கண்டனம்
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்காகவும் அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications