பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா வருகிறார்.. தொலைபேசியில் பேசிய பின் டிரம்ப் பகிர்ந்த தகவல்
வாஷிங்டன்: பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர வாய்ப்பு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய டொனால்டு டிரம்ப் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியா - அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

அத்துடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- எனது நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசியது மகிழ்ச்சியை அளிக்கிறது.
2-வது முறையாக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியிருந்தார். மேலும் அவர், 'பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் நம்பிக்கையான ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதியேற்றோம். நமது மக்களுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்' என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், திங்கள் கிழமை அவருடன் (பிரதமர் மோடி) நீண்ட நேரம் உரையாடினேன். வரும் மாதங்களில் அவர் வெள்ளை மாளிகைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அநேகமாக பிப்ரவரி மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவுடன் நமக்கு நல்ல நட்புறவு உள்ளது" என்றார். அப்போது, பிரதமர் மோடியுடன் பேசியதன் விவரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த டிரம்ப், " அனைத்து விவகாரங்கள் குறித்து பேசினோம் என பொருள்படும் வகையில் பதிலளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது முந்தைய பதவி காலத்தில் கடைசி வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து இருந்தார். டிரம்புக்கும் மோடிக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவு உள்ளது. ஹூஸ்டனில் கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் அகமதாபாத்தில் 2020 ஆம் ஆண்டு இரு தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு, அவருடன் பேசிய டாப் மூன்று உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.












Click it and Unblock the Notifications