அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. “ரேர் பீஸ்”! இந்தியாவில் கூட நடந்ததில்லையே!
வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், இன்று நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்று செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க செய்தியாளரின் ஒரு கேள்வி, இந்திய செய்தியாளரின் ஒரு கேள்வி என அடுத்தடுத்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளே இந்த செய்தியாளர் சந்திப்பில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்வை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தி உள்ளதோடு, "இது ஒரு பெரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, செய்தியாளர் சந்திப்பு ஒரு "பெரிய விஷயம்" என்பதை வெள்ளை மாளிகை புரிந்து கொண்டுள்ளது என்றார். மேலும், அமெரிக்க பயணத்தின் முடிவில் ஒரு செய்தியாளர் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று கிர்பி கூறியுள்ளார்.
மேலும், "இந்தச் சந்திப்பு முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் முக்கியமானது என்று இந்திய பிரதமர் மோடி நினைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, அவ்வப்போது நேர்காணல்களைத் தாண்டி ஊடகங்களை நேரடியாக சந்திப்பது வழக்கத்திற்கு மாறானது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட பிரதமர் மோடி பேசவில்லை.
கடந்த மே 2019இல் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். ஆனால் எந்தவொரு செய்தியாளரின் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications