அலாஸ்காவில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் டெலிங்காமில் இருந்து 437 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை 11.42 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் அலாஸ்காவில் பெரிவில்லேவில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு 28 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டடது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி இருந்தது .

இதையடுத்து கென்னடி நுழைவு முதல் யுனிமாக் பாஸ் வரை தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு அமெரிக்கா அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக அலாஸ்காவின் சேண்ட் பாய்ண்ட் நகரின் கடற்கரை பகுதியில் இருந்து 103 கிலோமீட்டர் தூரத்தில், 17.7 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16ம் தேதி முதல் தொடர்ந்து சிறிய அளவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.இது ரிக்டர் அளவில் 3 என்கிற அளவிலேயே இருந்தது. தற்போது முதல் முறையாக ஒரே நாளில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது,. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சேதம் குறித்து விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications