பூமியை இன்றிரவே தாக்கும் சூரிய புயல்.. சாட்டிலைட்கள் கூட செயலிழக்கும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: சூரியனின் ஒரு பகுதியில் இருந்து திடீரென வெடித்துச் சிதறிய கொரோனல் மாஸ் எஜெக்ஷன் அதிவேகமாகப் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பூமியைத் தாக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அப்படி அது பூமியைத் தாக்கினால் மிகப் பெரியளவில் விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை வந்துள்ளது.
நமது பூமி இப்போது இந்த நிலையில் இருக்க முக்கிய காரணமே சூரியன் தான். சூரியனில் இருந்து வரும் சூரிய கதிர்களே பூமி இப்படி இங்க பிரதான காரணமாக இருக்கிறது. இதனால் சூரியனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உலகெங்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நாசா ஆய்வாளர்கள் சூரியன் குறித்து மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொரோனல் மாஸ் எஜெக்ஷன்
இதற்கிடையே ஒரு சக்திவாய்ந்த கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) சூரியனில் இருந்து கிளம்பியுள்ளது. பூமியை நோக்கி வரும் இந்த எஜெக்ஷன் இன்றைய தினம் பூமியைத் தாக்கலாம் என்று நாசா மற்றும் என்ஓஏஏ (தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்) எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக G4 புவி காந்த புயலையும் பூமியைத் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் காரணமாக வானம் பல கலர்களில் ஒளிரும் அரோராக்கள் ஏற்படும் என்றும் அவை ஐரோப்பா மற்றும் பல அமெரிக்க மாகாணங்களில் இருந்து தெளிவாகத் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் கணித்த அளவுக்குப் புயல் தீவிரமானதாக இருந்தால் அது சமீப காலங்களில் ஏற்பட்ட மிக வலிமையான சூரிய புயல்களில் ஒன்றாக இருக்கும்.
சன்ஸ்பாட் 4100
சூரியனில் உள்ள சன்ஸ்பாட் 4100 என்ற இடத்தில் நேற்றைய தினம் சூரியன் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. அதுவே இப்போது படுவேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பூமியைச் சுற்றி வரும் சாட்டிலைட்களிலும் இவை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியனில் இருந்து மிகப் பெரிய மாஸ் எஜெக்ஷன் பூமியைத் தாக்குகிறது.
இவை ஜூன் 1 ஆம் தேதி மாலை முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சூரியனில் இருந்து வரும் இந்த எஜெக்ஷனின் வேரம் பல காரணங்களைப் பொருத்து மாறுபடும் என்பதால் துல்லியமாக அது பூமியை எப்போது தாக்கும் என்பதில் நிச்சயமற்ற சூழலே நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல விளைவுகள்
இதற்கிடையில், NOAA அமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சாட்டிலைட் மற்றும் ரேடியோ அலைவரிசையைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பவர் கிரிட் பாதிக்கப்பட்டு மிகப் பெரியளவில் மின்வெட்டு ஏற்படும் ஆபத்தும் கூட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சூரிய புயல்கள் தாக்கும்போது சாட்டிலைட், ஜிபிஎஸ், ரேடியோ சிக்னல்கள் தற்காலிகமாகச் செயலிழக்கும் ஆபத்து இருக்கவே செய்கிறது.
சூரிய துளை
முன்னதாக கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு தான் சூரியனின் மேற்பரப்பில் 10 லட்சம் கிமீ-க்கு மேல் அகலத்தில் ஒரு மிகப் பெரிய துளை உருவாகியுள்ளது என்றும் அது வெடித்துச் சிதறலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. அது வெடித்ததாலேயே இந்த சூரிய புயல் உருவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை அந்த சூரிய புயல் தாக்குவதால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications