டிரம்ப் ஒரே ஒரு அறிவிப்பு! நடுங்கிய வல்லரசுகள்.. அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் அமெரிக்கா? பின்னணி
வாஷிங்டன்: அணு ஆயுதச் சோதனை தொடர்பாக டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சீன அதிபரைச் சந்திக்கும் முன்பு அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போதும் கூட உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது டிரம்ப் திடீரென அணு ஆயுதச் சோதனைகளைத் தொடங்க உத்தரவிடுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். சீன அதிபரைச் சந்திக்கக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதை அவர் அறிவித்தார்.

அணு குண்டு சோதனை
இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் டிரம்ப் அணு குண்டுகளை வெடிக்க வைத்து சோதனை நடத்த வேண்டும் என சொன்னாரா இல்லை.. அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஏவுகணைகளைச் சோதனை செய்ய அழைப்பு விடுத்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.!
இதில் ஏவுகணைகள் என்றால் அது பெரிய சிக்கல் இல்லை. ஏனென்றால் உலகெங்கும் இது குறித்த சோதனைகள் நடந்தே வருகிறது. ஆனால், அணு குண்டை வெடிக்க வைத்து சோதனை என்றால் அது பதற்றத்தை தான் ஏற்படுத்தும். ஏனென்றால் அமெரிக்கா கடந்த 33 ஆண்டுகளில் அணு குண்டை வெடிக்க வைத்து சோதனை நடத்தியதே இல்லை. அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகளும் கூட இது குறித்துக் குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.
டிரம்ப் உத்தரவால் மாறுமா?
அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வதை நிறுத்திவிட்டன. இப்போது அதற்குப் பதிலாக சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் டேட்டாவை ஓடவிட்டு, அதன் மூலமாகவே ஆய்வுகளைச் செய்கிறார்கள். மேலும், அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்கிறார்கள். ஆனால், அந்த நிலை டிரம்ப்பின் உத்தரவால் மாறலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்குவதால் அமெரிக்காவுக்குப் பெரிதாக எந்தவொரு லாபமும் இருக்காது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக யூனியன் ஆஃப் கன்சர்ன்ட் சயின்டிஸ்ட்ஸ் அமைப்பின் இயக்குநர் தாரா ட்ரோஸ்டென்கோ கூறுகையில், "அமெரிக்கா அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்க எந்தவொரு காரணமும் இல்லை. இதனால் அமெரிக்க மக்களுக்குத் தான் ரிஸ்க் அதிகம்.. இதன் மூலம் அமெரிக்கா இழப்பதே அதிகம்" என்றார்
வெறும் மிரட்டல்
அதேநேரம் டிரம்ப் வெறுமன இதை அறிவிப்பாக மட்டும் வெளியிட்டிருக்கலாம்.. அவருக்கும் கூட நிஜமாக அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இருக்காது என இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். டிரம்ப் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தும்போது தங்களை வலிமையாகக் காட்டிக் கொள்வார். அதன் மூலம் நல்ல டீல் கிடைக்கும் என்பது அவரது ஐடியா. இதன் காரணமாகவே சீன அதிபரைச் சந்திக்கும்போது இதை அவர் அறிவித்தார். ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இதன் மூலம் அவர் ஒரு எச்சரிக்கைச் செய்தியை அனுப்ப முயன்றிருக்கலாம்.
அணு ஆயுதங்கள்
அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை இப்போது உலகில் 9 நாடுகள்- அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட எல்லா அணு வெடிப்பு சோதனைகளுமே கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டவை தான். இந்த 21ம் நூற்றாண்டில் வட கொரியா மட்டுமே அணுசக்தி சோதனை வெடிப்பை நடத்தியுள்ளது. அதுவும் கூட கடைசியாக 2017இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications