"எமர்ஜென்சி".. வெனிசுலாவை முடித்த கையோடு கியூபா பக்கம் திரும்பிய டிரம்ப்.. தடாலடி அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கப் படைகள் இம்மாதத் தொடக்கத்தில் தான் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இதற்கிடையே டிரம்ப் இப்போது தனது பார்வையை கியூபா மீது திருப்பி இருக்கிறார். கியூபா மீது நேஷனல் எமர்ஜென்சியை அறிவித்த அவர்.. அந்நாடு உடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகள் மீதும் கூடுதல் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்கப் படைகள் தாக்குதலை நடத்தியிருந்தது. வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து நாடுகடத்தியது. இதற்கிடையே டிரம்ப் பார்வை இப்போது கியூபா பக்கம் திரும்பியுள்ளது. கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் உத்தரவு
இது தொடர்பாக நிர்வாக உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.. கியூபா மீது பிரஷர் போடும் வகையிலேயே டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேநேரம் கியூபாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எத்தனை சதவிகிதம் வரி விதிக்கப்படும்.. எந்த நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்பது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் அதிபர் மாளிகை தரவில்லை. அந்த முடிவுகளை அமெரிக்க வர்த்தக அமைச்சர் எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1962ம் ஆண்டு முதலே அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளால் கியூபா பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகளால் கியூபாவால் எரிபொருளைக் கூட வாங்க முடியாத நிலை இருந்தது. சமீப காலம் வரை அதன் எரிபொருள் தேவைகளுக்கு வெனிசுலாவைச் சார்ந்திருந்தது. ஆனால், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்திவிட்ட நிலையில், இப்போது சிக்கலில் மாட்டி இருக்கிறது கியூபா.
வெனிசுலா விவகாரம்
வெனிசுலா விவகாரம் முடிந்த கையோடு அப்போதே, அடுத்து கியூபாவிற்குச் செல்லும் எண்ணெய் மற்றும் பணத்தை முழுமையாகத் துண்டிப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார். அதன்படியே அவர் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார். கியூபா உடனடியாக இறங்கி வந்து அமெரிக்காவுடன் தேநீரில்போடு வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
இருப்பினும், டிரம்பின் இந்த அறிவிப்பை கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கியூபா மற்றும் அதன் மக்களுக்கு எதிரான மிருகத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது.. 65 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிக நீண்ட மற்றும் கொடூரமான பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரும் அநீதி" என்றார்.
கூடுதல் வரி?
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவின் கீழ் கியூபாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் விற்கும் எந்தவொரு நாட்டின் மீதும் கூடுதல் வரிகளை விதிக்க முடியும். சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) மேற்கோள் காட்டி, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு அசாதாரண அச்சுறுத்தலாக கியூபா உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் கியூபா மீது டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார். முன்னதாக வெனிசுலா மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும் கூட டிரம்ப் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எமர்ஜென்சி அறிவிப்பு
கியூபா மீது நேஷனல் எமர்ஜென்சியை அறிவித்த டிரம்ப், வெனிசுலா மீது முன்வைத்த அதே குற்றச்சாட்டுகளையே கியூபா மீதும் சுமத்தினார். அவர் மேலும், "இந்த ஆட்சி அமெரிக்காவிற்கு விரோதமான நாடுகள், சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், தீய சக்திகளான ரஷ்யா, சீனா, ஈரான், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவற்றுக்கு ஆதரவளிக்கிறது," என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.
ஏற்கனவே கம்யூனிஸ்ட் தீவு நாடான கியூபா பல ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கும் சூழலில், இந்த உத்தரவு வந்துள்ளது. அங்கு ஏற்கனவே தினசரி 20 மணி நேரம் வரை நீடிக்கும் மின்வெட்டு, கடுமையான உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறை நிலவி வருவதால் கியூபா மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடுதல் பிரஷர் போடும் வகையில் டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications