டைம் கேப்சியூலில் இருக்கும் கடிதம்.. ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த ஆஸ்திரேலியா! சுவாரசியம்
வாஷிங்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியா மீது தனி அன்பு இருந்ததாகவும் இதனால் அதிக முறை தங்கள் நாட்டிற்கு வந்ததாக ஆஸ்திரேலிய தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டன் ஆட்சியில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். 1952 முதல் சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை வயது மூப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே மோசமடைந்து வந்தது. நிற்கவும் நடக்கவும் கூட சிரமப்பட்ட அவரது, கைகளும் கூட நீள நிறத்தில் மாறியது.

ராணி எலிசபெத்
ஸ்காட்லாந்தில் உள்ள மாளிகையில் ராணி எலிசபெத் ஓய்வு எடுத்து வந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது உறவினர்கள் பலரும் அவரை பார்க்கச் சம்பவ அரண்மனைக்கு விரைந்தனர். அப்போது இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ராணி எலிசபெத்தின் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பு ஏற்றார். லண்டனில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு பணிகளும் நடந்து வருகிறது.

கடிதம்
உலகில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக இருந்த ராணி எலிசபெத் பல்வேறு நாடுகளும் சென்றுள்ளார். அதன்படி அவர் கடந்த 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இருந்தார். அந்தச் சமயத்தில் அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதம் எழுதப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அதில் என்ன இருக்கிறது என யாருக்கும் தெரியாதாம். அந்த கடிதம் உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ரகசிய வாலெட் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு
இந்த வாலெட் ஆஸ்திரேலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா ராணி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் விக்டோரியா ராணியாகப் பதவியேற்ற வைர விழாவைக் கொண்டாடும் வகையில் 1898இல் திறக்கப்பட்டதாகும். ஏற்கனவே 36 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் 63 ஆண்டுகளுக்கு இந்த கடிதத்தை யாராலும் மடிக்க முடியாது. 1986 நவம்பரில் சிட்னி வந்திருந்த போது ராணி எலிசபெத் இந்த கடிதத்தை எழுதி இருந்தார்.

ஏன் திறக்கவில்லை
அது சரி ஏன் இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கடிதத்தைத் திறக்கவில்லை எனக் கேட்கிறீர்களா? ராணி எலிசபெத் பயணத்தின் போதே, இந்தக் கடிதத்தை எப்போது திறக்க வேண்டும் என்பது குறித்தும் பிரிட்டிஷ் அரசு மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளனர். 2085ஆம் ஆண்டு, அதாவது ராணி ஆஸ்திரேலியா வந்து சென்று 100 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இந்த கடிதத்தைத் திறக்க வேண்டும் என்று சிட்னி மாநகரத்தந்தைக்குக் கூறப்பட்டு உள்ளது.

தனி அன்பு
ராணி எலிசபெத்திற்கு மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியா மீது தனி காதல் உள்ளது. ராணி எலிசபெத் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இருந்தாலும், அவர் அதிக முறை விசிட் செய்த நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. அவர் மொத்தம் 16 முறை ஆஸ்திரேலாவுக்கு சென்று உள்ளார். இதில் இருந்தே அவர் அந்த நாடு மீது எந்தளவுக்கு அன்பு வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

தொடர்பு
அது சரி ஆஸ்திரேலாவுக்கும் ராணி எலிசபெத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். ஆஸ்திரேலியா மட்டுமின்றி இன்றும் கூட கனடா உள்ளிட்ட உலகின் 14 நாடுகளின் பிரிட்டன் மகாராணி ராணி எலிசபெத் தான் தலைவர். பிரிட்டன் ஆட்சியில் இருந்து பல்வேறு நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கியது. அவை புதிய சுதந்திர நாடுகளாக உருவெடுத்த சமயத்தில், சில நாடுகள் ராணி எலிசபெத்தையே நாட்டின் தலைவராக வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சட்டம் தோல்வி
இந்தச் சூழலில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலைமை பொறுப்பில் இருந்து ராணி எலிசபெத்தை நீக்கச் சட்டம் ஒன்றை சில ஆஸ்திரேலியா எம்பிக்கள் கொண்டு முயன்றனர். ராணி எலிசபெத் தலைமை பொறுப்பில் இருப்பது அடிமைத்தனத்தைக் காட்டுகிறது என்பது அவர்களின் வாதம். இருப்பினும், அந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications