மாடியில் நின்று காஃபி குடித்த பெண்.. வானத்தில் இருந்து பொத்தென்று விழுந்த பொருள்.. பார்த்தால் ஷாக்!
வாஷிங்டன்: வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்த பெண் ஒருவர் மீது வானில் இருந்து விண்கல் விழுந்துள்ளது. மிகவும் அரிதிலும் அரிதான இந்த நிகழ்வு குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பூமியை நோக்கி நூற்றுகணக்கான விண்கற்கள் தினமும் வந்துவிட்டு கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் எரிந்து துகள்காக போய்விடும் என்றாலும் அரிதாக சில விண்கற்கள் பூமி மீது விழுவதுண்டு.

இதுபோன்ற ஒரு அரிய நிகழ்வுதான் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது. இதை அரிது என்பதை விட அரிதிலும் அரிது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அப்படி என்னதான் நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம். பிரான்ஸ் நாட்டில் தனது வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பெண் ஒருவர் காஃபி குடித்துக் கொண்டு இருந்து இருக்கிறார். தனது தோழியுடன் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடியே இருவரும் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென வானத்தில் இருந்து விண்கல் அவரது மீது விழுந்துள்ளது. விலா எலும்பில் கல் விழுந்ததில் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், " எங்கள் வீட்டின் கூரைக்கு மேல் பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. அதன் தொடர்ச்சியாக எனது விலா எலும்பில் ஷாக் அடித்தது போல உணர்ந்தேன். வவ்வால் போன்ற ஏதாவது வந்து தாக்கி விட்டதாக நான் கருதினேன்.
ஆனால், சிறிய சிமெண்டு துண்டு போல ஒரு பொருள் கிடந்தது. எந்த ஒரு நிறமும் இல்லாத சிறிய கூழாங்கல் போல இருந்தது. அது சிமெண்டு துண்டாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்தான் இது விண்ணில் இருந்து விழுந்த விண்கற்களாக இருக்கும் என்றார். இதையடுத்து, தனக்கு தெரிந்த புவியியல் ஆராய்ச்சியாளர் தியேர்ரி ரெப்மனிடம் தன் மீது விழுந்த கல்லை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்ய சொல்லியிருக்கிறார்.
இதில், இந்த கல் பூமியில் காணப்படாத ஒன்றும் பூமிக்கு அப்பாற்பட்ட பொருள்தான் என்பதையும் உறுதி செய்தார். மேலும் பாறை மற்றும் சிலிகான் கலவையை கொண்டிருப்பதால் இது விண்கல்லாக இருக்கக் கூடும் என்றும் கூறியிருக்கிறார். விண்ணில் இருந்து கல் விழுந்து சிதறியுள்ளது. இவற்றின் மொத்த எடை 100 கிராம் அளவுக்கு இருந்துள்ளது. விண்ணில் இருந்து வரும் கற்கள் மனிதன் மீது விழுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பூமியின் வளிமண்டலத்தில் இருந்து தப்பி பூமி மீது விழும் விண்வெளி பாறைகளே விண்கல் என்பதாகும். விண்வெளியில் இருக்கும் போது இவை விண்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு முன்பாக கடந்த 1954 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பெண் மீது விண்கல் விழுந்துள்ளது. 3.6 கிலோ எடை கொண்ட விண்கல் வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications