சொந்த நாட்டு ராணுவமே இப்படி பண்ணலாமா! கடும் கோபத்தில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்கா பரபரப்பு தகவல்
வாஷிங்டன் : உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு இருப்பதை அறிந்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் கடும் கோபத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ரொமானியா, ஹங்கேரிக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரால் அகதிகளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 40 லட்சத்தை தாண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உக்ரைன் நாட்டில் 10ல் ஒருவர் அகதியாகி இருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது.

பலனளிக்காத பேச்சுவார்த்தை
அதே நேரம் தாக்குதல்களை குறைப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இருநாட்டு பேச்சுவார்த்தையும் பலன் தரவில்லை என பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கீவிலிருந்தும் செர்னிகிவ் நகரிலிருந்தும் ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை என ஊடகங்கள் கூறுகின்றன.

என்ன சொல்கிறார் உக்ரைன் அதிபர்?
தலைநகர் கீவின் வடகிழக்கு பகுதியான இர்பின் அருகே அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் சத்தம் கேட்பதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கி, "நாங்கள் இனி யாரையும் நம்ப தயாராக இல்லை. உக்ரைனியர்கள் ஒவ்வொரு மீட்டருக்காகவும் சண்டையிடுவோம்." என்றார்.

புதினின் அதீத நம்பிக்கை
அதீத நம்பிக்கையுடன் தங்கள் படைபலத்தை கொண்டு மிகக்குறுகிய நாட்களில் உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்று எண்ணிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருமாதமாகியும் ரஷ்ய படைகள் தடுமாறி வருவதை எண்ணி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்ய படைகளுக்கு பெரும் இழப்பு
குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களின் உதவியோடு ரஷ்ய படைகளை உக்ரைன் படைகள் துவம்சம் செய்துள்ளன. இதனால் ரஷ்ய படை ஏராளமான வீரர்களையும் ஆயுதங்களையும் இழந்துள்ளது. தொடரும் போர் காரணமாக ரஷ்ய படைகள் மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் நெருக்கடியில் புதின்
ஒரு பக்கம் உக்ரைனில் ரஷ்ய படைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மறுபக்கம் ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் மீது விதித்து உள்ளன. அதன் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிளை முடக்கவும் முயற்சித்து வருகின்றன. இதனால் ஏற்படப்போகும் பொருளாதார இழப்பை சமாளிக்க வேண்டிய நெருக்கடியும் புதினுக்கு உள்ளது.
Recommended Video

படைத் தளபதிகள் மீது நம்பிக்கை இழந்த புதின்
இதுகுறித்து அமெரிக்க தகவல் தொடர்பு இயக்குநர் கேட் பெட்டிங்பீல்டு தெரிவிக்கையில், "ரஷ்ய படையினர் உண்மையை மறைத்துவிட்டு தன்னை தவறாக வழிநடத்திவிட்டதாக எண்ணி விளாடிமிர் புதின் ஆத்திரத்தில் இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது." என்றார். புதின் தனது படைத் தளபதிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications