உலகின் முதல் முத்தம்.. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே நடந்த அதிசயம்! எப்படி சாத்தியம்?
வாஷிங்டன்: நம்மை போன்ற நவீன மனிதர்கள் சுமார் 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றினார்கள். ஆனால் உலகின் முதல் முத்தம் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
முத்தம் என்றால் என்ன? நீர் யானைகள் வாயை பிளந்து சண்டை போடுகிறதே, நாய்கள் தங்கள் குட்டியை நக்குகிறதே, அல்லது பறவைகள் உணவை ஊட்டுகிறதே! இதெல்லாம் முத்தம் கணக்கில் வராது. இது இல்லாமல் உதடு மேல், உதடு வைத்து கொடுக்கப்படுவதுதான் முத்தம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மற்றும் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் முத்தம் எப்போது நடந்தது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஃபைலோஜெனெடிக் மேப்பிங் என்கிற முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது குரங்குகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்ததில் உலகின் முதல் முத்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் குரங்குகளின் நடத்தைகளை கண்காணித்திருக்கிறார்கள். ஏனெனில் உலகில் மனிதர்கள் மற்றும் குரங்குகளை தவிர வேறு எந்த உயிரினமும் முத்தமிட்டுக்கொள்வதில்லை. எனவே பல வகையான குரங்குகளை ஆண்டுக்கணக்கில் கண்காணித்திருக்கிறார்கள். அந்த வகையில் முத்தமிடும் குரங்குகளை தனியாக பிரித்திருக்கிறார்கள். பொனபோக்கள், சிம்பான்சிகள், ஒராங்குட்டான் ஆகிய குரங்குகள் முத்தமிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றன. எனவே குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவான மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அழைத்து செல்கிறது. இந்த காலம் மிக முக்கியமானதாகும். இந்த காலத்தில்தான் மனிதர்களுக்கும், மனித குரங்குகளுக்கும், சாதாரண குரங்குகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் வாழ்ந்த காலம். இன்று நாம் வாழும் காலத்தை ஜீரோவாக கணக்கில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பரிணாம வளர்ச்சி புரியும். 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பொதுவான மூதாதையரிலிருந்து குரங்குகள் தனியாகவும், ஒராங்குட்டான்கள் தனியாகவும் பிரிந்தன. அதன் பின்னர் 1.20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓராங்குட்டான்களும், மனிதர்களும் பிரிந்தனர்.
பின்னர் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களும், கொரில்லாக்களும் பிரிந்தனர். கடைசியாக 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களும், சிம்பான்சிகளும் பிரிந்தனர். இதனை கணக்கிட்டு பார்த்தால் முதல் முதல் முத்தம் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியுள்ளது. அது இன்று வரை நீடிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications