"பணிந்து விட்டார்கள்".. இந்தியாவை குத்திக்காட்டி பேசிய டிரம்ப்.. தொடரும் அமெரிக்காவின் அடாவடி
வாஷிங்டன்: தெற்காசிய நாடுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் பதிலுக்கு பதில் வரியை அமெரிக்கா விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தான் ‛‛சிலர் தாங்கள் என்ன செய்தோம் என்பதை வைத்து இப்போது அம்பலப்பட்டு நிற்கின்றனர். அமெரிக்க பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது'' என்று இந்தியாவை குத்திக்காட்டி பேசி உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக எந்தெந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதிக்கிறதோ, அந்த நாடுகளுக்கு அமெரிக்காவும் அதிக வரிகளை விதிக்கும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த வரி விதிப்பில் முதற்கட்டமாக அமெரிக்காவின் அண்டை நாடான கனடா, சீனா ஆகியவை தான் பாதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவிற்கு கூடுதல் வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தாலும் கூட அது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி என்பது டொனால்ட் டிரம்பை உறுத்தி கொண்டே இருக்கிறது.
இதனால் அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரியை விதிக்கிறது என்று தொடர்ந்து கூறி வந்த டொனால்ட் டிரம்ப் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 2 நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் பேசும்போது, ‛‛இந்தியா நமக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது. சீனாவின் சராசரி வரி என்பது நம் தயாரிப்புகளுக்கு நாம் வசூலிப்பதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது. தென்கொரியாவின் சராசரி வரி என்பது நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. நண்பர்கள் மற்றும் எதிரிகள் என்று அனைவரும் இதனை செய்கின்றனர். இது அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை. ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரிகள் அமலுக்கு வருகின்றன. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி
விதிக்கிறார்களோ, அதேபோல் நாமும் பதிலுக்கு வரி விதிப்போம். ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம். இதனால் அந்த அறிவிப்பை ஏப்ரல் 2ல் செயல்படுத்த உள்ளேன்'' என்று கூறினார். இதன்மூலம் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகள் மீது டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அபாயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதிக்கும் தெற்காசிய நாடுகள் உடனடியாக அதனை மாற்றியமைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாங்களும் கூடுதல் வரியை விதிப்போம் என்று மறைமுகமாக மிரட்டினார். வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவுக்கு அதிக வரிகளை இந்தியா விதிக்கிறது இது ரொம்ப அதிகம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்ய முடியாத அளவுக்கு வரி என்பது உள்ளது. ஆனால் இப்போது அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதன்மூலம் அம்பலப்பட்டுள்ளனர்.
கனடா என்பது அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இது ஏற்கனவே முடியாது. யாரும் அதனை பேசவே இல்லை. இனி இதுபோல் நடக்கவே கூடாது. அவர்கள் எவ்வளவு வரி விதிக்கிறார்களோ அதேபோல் நாமும் வரி விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் பதிவுக்கு பதில் வரி விதிப்பதாக கூறிய நிலையில் இந்தியா பணிந்துவிட்டது. அவர்கள் நமக்கு கூடுதல் வரியை விதித்தனர். இப்போது நாம் கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தன் மூலம் வேறு வழியின்றி குறைத்துள்ளனர். அதோடு அமெரிக்காவுக்கு கூடுதல் வரி விதித்தது அம்பலமாகி உள்ளது என்று குத்திக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications