அமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு யாருக்கு... காணொலி மூலம் காரசாரமாக நடந்த விவாதம்..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த விவாதம் அமெரிக்க வாழ் இந்துக்களிடையே நடைபெற்று வருகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிப்பதா டிரம்புக்கு ஆதரவளிப்பதா என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் அதிபர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
அவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டு தெரிவித்து மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டை வளைக்க அவர்கள் இருவரும் முட்டி மோதி வருகின்றனர்.
பல மாகாணங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இருப்பதால் இந்த முறை அவர்களின் ஓட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே அமெரிக்க வாழ் இந்துக்கள் அறக்கட்டளை மற்றும் அமைப்பு சார்பில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள 20 லட்சம் இந்துக்களின் ஓட்டை கமலா ஹாரிஸ் மூலம் ஜனநாயக கட்சி பெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள டிரம்ப் அந்த ஓட்டுக்களை தன் பக்கம் வளைக்க காரியமாற்றி வருகிறார். இதனிடையே யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக அமெரிக்க வாழ் இந்துக்கள் காணொலி மூலம் நடத்திய ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.
சிலர் டிரம்புக்கு ஆதரவாகவும் அவர் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். மற்றொரு தரப்பினர் கமலா ஹாரிஸை முன்னிறுத்தி பேசி ஜனநாயக கட்சியை ஆதரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் அமெரிக்க வாழ் இந்துக்களின் ஓட்டு அதிகளவில் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.