உதவி செய்தி தொடர்பாளர் பதவி விலகல்.. வெள்ளை மாளிகை அதிகாரிகளும் பரிசீலனை!.. டிரம்புக்கு நெருக்கடி?
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறையை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தூண்டிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெள்ளை மாளிகையின் உயரதிகாரிகள் பதவி விலக பரிசீலனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் டிரம்பிற்கு நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.
ஜோ பிடனின் வெற்றியை அறிவிப்பதற்கான நடைமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த போது டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கு நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பெண் ஒருவர் பலியானார். இந்த வன்முறையில் டிரம்ப் சம்பந்தப்பட்டிருப்பதை அடுத்து வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய பரிசீலனை செய்து வருகிறார்கள்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் மாட் போட்டிங்கெர், அதிபர் டிரம்பின் உதவியாளர் கிறிஸ் லிடெல் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்ய பரிசீலனை செய்து வருகிறார்கள்.
வெள்ளை மாளிகை உதவி செய்தித் தொடர்பாளர் சாரா மாத்யூஸ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற முறையில் இன்று நடந்த சம்பவங்களை கண்டு நான் வேதனை அடைந்தேன்.
எனது பதவியிலிருந்து நான் உடனடியாக விலகுகிறேன். நமது தேசத்திற்கு அமைதியான அதிகார மாற்றம் தேவை என்றார். டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் தலைமை அதிகாரி ஸ்டெஃபானே கிரிஷாம், வெள்ளை மாளிகை சமூக தொடர்பாளர் அன்னா லாய்ல்டு ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.
ராபர்ட் ஓ பிரையன், அதிபர் குறித்து தனது ட்விட்டரில் விமர்சனங்களை முன் வைத்தது அவரது ஆதரவாளர்களை கோபமூட்டியது. அது போல் துணை அதிபர் மைக் பென்ஸை பிரையன் பாராட்டியதும் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுத்துவிட்டார். அரசியல்சாசனத்தின்படிதான் செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் அறிவித்தார். இதை ராபர்ட் ஓ பிரையன் தனது ட்விட்டரில் பென்ஸை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில் பென்ஸ் நேர்மையானவர்.
இன்று அவர் தனது தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு நியூயார்க் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது எப்படி தைரியமாக செயல்பட்டாரோ அது போல் தற்போதும் அவர் செயல்பட்டுள்ளார். நான் அவருடன் பணியாற்றியை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
இது போல் அமைச்சர்கள், டிரம்ப் ஆதரவாளர்கள் பதவி விலகினால் டிரம்ப் வரும் 20-ஆம் தேதிக்குள் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications