டிரம்ப் vs ஹார்வர்ட்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடை.. இந்தியர்கள் பாதிப்பு?
வாஷிங்டன் டிசி: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அளித்து வந்த ரூ.18 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா அரசு நிறுத்தி வைப்பதாக கூறிய நிலையில், தற்போது மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உலக நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவை வெளியிட்டார்.
நிதியை நிறுத்திய டிரம்ப்
ஆனால் டிரம்ப் உத்தரவுக்கு இணங்கப் போவதில்லை என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. அதேபோல் டிரம்ப் உத்தரவிட்ட மாற்றங்களையும் செய்ய மறுத்தது. இதன் காரணமாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை நிறுத்தி வைப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது.
தடை விதித்த அமெரிக்கா அரசு
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை கூறி இருக்கிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
செக் வைத்த டிரம்ப்?
அமெரிக்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள், வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதேபோல் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், வரவிருக்கும் கல்வி ஆண்டுக்கு முன் மீண்டும் பழைய நிலை திரும்ப வேண்டுமென்றால், 72 மணி நேரத்திற்குள் தேவையான தகவலை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் பாதிப்பு?
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 முதல் 800 மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்று வருகின்றனர். தற்போதைய தகவலின்படி இந்தியாவில் இருந்து 788 மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளனர். இதனால் இவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications