டிரம்பை கொல்ல சதி செய்த பாகிஸ்தான் நபர்? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய FBI.. அமெரிக்காவை அதிர வைத்த வழக்கு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசியல்வாதி ஒருவரைக் கொல்லச் சதி செய்ததாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 பிரச்சாரத்தின்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்ல முயன்றார் எனச் சொல்லப்படுகிறது. தீவிரவாத முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில காலமாகவே முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் நடந்து வருகிறது. அவர்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ, சீக்ரெட் சர்வீஸ் ஆகியவை தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை தொடக்கம்
இதற்கிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட் என்பவர் மீது அமெரிக்கா நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அரசியல்வாதி ஒருவரைக் கொல்லச் சதி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நியூயார்க் நீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணை தொடங்கியது. 2024 பிரச்சாரத்தின்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்ல முயன்றார் எனச் சொல்லப்படுகிறது. தீவிரவாத முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் 47 வயதான மெர்ச்சன்ட் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சீக்ரெட் ஆபரேஷன் ஒன்றில், எஃப்.பி.ஐ ரகசிய ஏஜெண்டுகளையே சந்தித்த இவர், அமெரிக்க அரசியல்வாதியைக் கொல்ல 5,000 டாலர் அளித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.
என்ன நடந்தது
2024 ஜூன் மாதம், மெர்ச்சன்ட் ஒரு ஹோட்டலிஸ் தனது சதித்திட்டத்தை அவர்களுக்கு விளக்கியுள்ளார். அங்கு டிஷ்ஷு பேப்பரில் தனது சதித்திட்டத்தை விவரித்தார். பொதுக்கூட்டத்தில் அரசியல்வாதியைச் சுட்டு, தப்பிக்கக் கலவரத்தை உருவாக்குவதே இவரது திட்டமாக இருந்துள்ளது.. இது குறித்து நதீம் அலி என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அதில் மெர்ச்சன்ட்டின் இந்தத் திட்டத்தைக் கேட்டவுடன் தான் அதிர்ச்சி அடைந்ததாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
கொலைகாரர்களை ஏற்பாடு செய்ய மெர்ச்சன்ட் தன்னிடம் கேட்டதாகவும், அதை FBIக்காக தான் ரகசியமாகப் பதிவு செய்ததாகவும் சாட்சியமளித்தார். எஃப்.பி.ஐ ஏஜெண்டுகளை சந்தித்து 5,000 டாலர் அளித்த பிறகு மெர்ச்சன்ட் கைது செய்யப்பட்டார். அதேநேரம் அவர் யாரைக் கொல்லச் சதி செய்தார் என்பதை வாயைத் திறந்து சொல்லும் முன்பே ஏஜெண்டுகள் அவரை கைது செய்துவிட்டனர்.
டிரம்ப்பை கொல்லச் சதி?
இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் உலகைக் காயப்படுத்திய ஒரு அரசியல்வாதி தான் இலக்கு என அலியிடம் மெர்ச்சன்ட் கூறியிருக்கிறார். மேலும், மெர்ச்சன்ட்டின் லேப்டாப்பில் டிரம்ப் பேரணி இடங்கள் தேடப்பட்டது கண்டறியப்பட்டது. எனவே, டிரம்ப்பை கொல்லவே அவர் சதி செய்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அதேநேரம் இந்தச் சம்பவத்திற்கும் 2024 ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் டிரம்ப்பைக் கொல்ல நடந்த முயற்சிக்கும் தொடர்பில்லை. பென்சில்வேனியாவில் அவர் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தபோது, எதிரே ஒரு கட்டிடத்தின் கூரை மீது ஏறிய நபர், டிரம்ப்பை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் டிரம்பின் காதில் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றது. இந்த சம்பவத்திற்கு பிறகே டிரம்பிற்கான தேர்தல் ஆதரவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது
மெர்ச்சன்ட் ஒரு மியூட்சுவல் நண்பர் மூலமாகத் தன்னை அணுகியதாக நதீம் அலி தெரிவித்தார். டி-ஷர்ட் வணிகம் தொடர்பாக நதீம் அலியை மெர்ச்சன்ட் அணுகினார். ஆனால், வணிக நிபந்தனைகள் நதீம் அலிக்கு "சந்தேகத்திற்குரியதாக" தோன்றின. அதைத் தொடர்ந்தே அவர் இது தொடர்பாக எஃப்.பி.ஐ ஏஜெண்டுகளுக்கு தகவல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications