ரேடாருக்குள் வந்த கனடா.. டிரம்ப் நடவடிக்கையால் இந்தியர்களுக்கு தான் பாதிப்பு அதிகமாம்! ஷாக் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போதே கூற ஆரம்பித்துவிட்டார். அவரது ரேடாரில் மெக்சிகோ மட்டுமின்றி கனடாவும் வந்துள்ள நிலையில், இதனால் இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் வழக்கம் போலச் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்றப் போவதாகவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் கூற ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப்: அவர் இதற்கு முன்பு 2016- 2020 வரை அதிபராக இருந்த போதே இந்த சட்டவிரோத குடியேற்றம் குறித்தே தொடர்ந்து வந்தார். இதற்காக அவர் மெக்சிகோ எல்லையில் சுவர் கூட கட்டினார். ஆனால், இந்த முறை டிரம்ப் மெக்சிகோ உடன் கனடாவையும் லிஸ்டில் சேர்த்துவிட்டார். கனடாவில் இருந்தும் கூட அதிகப்படியானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவதாக அவர் விமர்சிக்கிறார்.
கடந்த நவ. 25ம் தேதி இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இது அனைவருக்கும் தெரியும். பல ஆயிரம் பேர் மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறார்கள். இதுவரை கண்டிராத அளவில் குற்றங்கள் மற்றும் போதைப் பொருட்களையும் அவர்கள் உடன் அழைத்து வருகிறார்கள். இதால் இந்த இரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
கனடா: சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக மெக்சிகோ மீது இதுபோன்ற புகார்கள் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், கனடா மீதும் இதுபோன்ற புகாரை டிரம்ப் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சரி கனடா அமெரிக்க எல்லையில் என்ன நடக்கிறது.. டிரம்ப் சொன்னது போல இருக்கிறதா என்று கேட்டால், அதற்குப் பதில் சிக்கலானதாகவே இருக்கிறது.
கனடா வழியாகச் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது என்ற போதிலும் இப்போதும் மெக்சிகோ உடன் ஒப்பிடுகையில் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கடந்தாண்டு அக். மாதம் முதல் இந்தாண்டு செப். வரை மட்டும் கனடா எல்லை வழியாகச் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக சுமார் 23,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022 ஆண்டில் இது வெறும் 2,000ஆக இருந்த நிலையில், 2023 இது சுமார் 10,000 ஆக உயர்ந்தது. இந்தாண்டு அது இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
97 நாடுகள்: பெரும்பாலான மக்கள் கனடா அமெரிக்க எல்லையில் கியூபெக் மற்றும் வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் நியூயார்க்கிற்கு இடைப்பட்ட பகுதியான ஸ்வாண்டன் செக்டர் வழியாகவே சட்ட விரோதமாக நுழைய முயல்வதாகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 97 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுபோல சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
கனடா எல்லையே இந்தளவுக்கு என்றால் அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்குக் கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜூன் மாதம் மெக்சிகோ எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பைடன் உத்தரவிட்ட நிலையில், அதன் பிறகு சட்டவிரோதமாக நுழைய முயல்வோர் எண்ணிக்கை குறைந்தது. அதேநேரம் கடந்த அக். மாதம் மட்டும் சுமார் 56,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள்: சட்டவிரோதமாக நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள் கனடா நாட்டு வல்லுநர்கள். சுற்றுலா அல்லது தற்காலிக விசா மூலம் கனடா செல்லும் இந்தியர்கள் அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைகிறார்கள். கனடா எல்லை வழியாகச் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்க இதுவே காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்த எண்ணிக்கை சமீப ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக கொரோனா பரவலுக்குப் பிறகு இது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனடாவில் உள்ள இந்தியர்களைச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் செல்வதாகச் சொல்லி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று அங்குச் செயல்பட்டு வருகிறது. இதுபோல சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தாலும் கூட அவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்பதால் இவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஏமாற வேண்டாம்: சமீபத்தில் கூட அக். இறுதியில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த சுமார் 400 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது. எனவே, அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் செல்கிறோம் என்பவர்களிடம் ஏமாறாமல் இருப்பதே நல்லது.












Click it and Unblock the Notifications