சீனாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. யூடர்ன் போட்ட டிரம்ப்.. அமெரிக்காவுக்கு விழுந்த அடி அப்படி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. இதனால் இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா சென்று படிக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் திடீரென யூடர்ன் போட்டுள்ள டிரம்ப், சீன மாணவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பைக் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சிறு தவறுகளுக்கும் நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டிரம்ப் நடவடிக்கைகள்
குறிப்பாக அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருக்கும் வெளிநாட்டினரே அதிகச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். டிரம்ப் அதிபராகப் பதவியேற்றது முதல் இப்போது வரை பல நூறு மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு, பலரும் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அமெரிக்கா செல்லவே யோசிக்கும் சூழலே நிலவுகிறது.
இப்படிக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் டிரம்ப் திடீரெனச் சீனாவுக்கு மிகப் பெரிய ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்தாண்டு ஆறு லட்சம் சீன மாணவர்கள் படிக்க அனுமதியளித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முக்கியமான உறவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீன மாணவர்கள்
இதற்கு முன்பு சீன மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் மாணவர்கள் அல்லது அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு தொடர்புடைய முக்கியமான துறைகளில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வோம் என டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், இப்போது டிரம்ப் நிர்வாகம் அதில் யூடர்ன் போட்டுள்ளதையே இது காட்டுகிறது.
யூடர்ன் போட்ட டிரம்ப்
இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "சீன மாணவர்கள் அமெரிக்கா வர அனுமதிப்போம். இது மிகவும் முக்கியமானது.. இதன் மூலம் 6 லட்சம் சீன மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது மிகவும் முக்கியமானது. நாங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் சீனா தனது ரேர் எர்த் மெடல் ஏற்றுமதிக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் டிரம்ப் சில கருத்துகளைக் கூறினார். சீனா ரேர் மெடல்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சீன பொருட்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
எழுந்த கடும் எதிர்ப்பு
இருப்பினும், அமெரிக்கா சீனா இடையேயான இந்த வர்த்தகப் பதற்றங்கள் சீன மாணவர்களைப் பாதிக்காது என்றும் அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் உறுதியளித்தார். இருப்பினும், டிரம்ப்பின் இந்த நடவடிக்கை அவரது சொந்தக் கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் இப்படிச் செய்வது தவறு என அவர்கள் சாடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக டிரம்ப்பின் வரிகள் அமெரிக்கா- சீனா உறவுகளைக் கடுமையாகப் பாதித்தது.. கடந்த ஏப்ரல் மாதம் முதலில் டிரம்ப் நிர்வாகம் சீன இறக்குமதிக்கான வரிகளை 145% வரை உயர்த்தியது. அதற்குச் சீனாவும் பதிலடி கொடுத்து வரிகளை உயர்த்தியது. மாறி மாறி வரிகளை உயர்ந்து வந்த சூழலில், ஒரு தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அமெரிக்காவுக்குச் சீனா வைத்த செக்
டிரம்ப் தனது வரிகளை நிறுத்தி வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் போட 90 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இந்தக் காலக்கெடு ஆகஸ்ட் 12ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும், சீனா தனது ரேர் எர்த் மெடல் ஏற்றுமதிக்கு விதித்த கட்டுப்பாடுகளே அமெரிக்காவை இறங்கி வர வைத்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அதாவது சீனா நேரடியாகத் தடை விதிக்கவில்லை என்றாலும் ரேர் எர்த் மெடல்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை மறைமுகமாகத் தாமதப்படுத்தியது. ரேர் எர்த் மெடல் இல்லை என்றால் ஆட்டோமொபைல், விண்வெளி என அமெரிக்காவில் பல்வேறு துறைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே டிரம்ப் யூடர்ன் போட்டதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications