ஈரான் பஞ்சாயத்து.. போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு! சர்வதேச நாடுகள் நிம்மதி!
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு, இன்று நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
டிரம்பின் இந்த முடிவு சர்வதேச நாடுகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் ஈரான் மீதான துறைமுக முற்றுகை தொடரும் என்றும், அமெரிக்க கடற்படை எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருப்பது, போர் நிறுத்தம் தொடர்பான அவருடைய அறிவிப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டிரம்ப் சொன்னது என்ன?
ஈரானுடனான போர்நிறுத்தத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காலவரையறையின்றி நீட்டித்துள்ளார். ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ளதால், அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தைக் கொண்டுவர அவகாசம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்குப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையே காரணம் என ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானின் பங்கு
ஈரான்-அமெரிக்க இடையே பஞ்சாயத்து பேசுவதில் பாகிஸ்தானுக்குதான் அதிக லாபம். காரணம், பாகிஸ்தான் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியருக்கிறது. இந்த நேரம் பார்த்து, ஈரான் போர் வந்திருப்பதால் பாக்., அதிக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. எனவே போர் நிறுத்தம் ஏற்பட்டால், அது முதலில் பாகிஸ்தானுக்குதான் நிம்மதியை கொடுக்கும். எனவேதான் பாகிஸ்தான் போர் நிறுத்த விஷயத்தில் சீரியஸாக இறங்கியிருக்கிறது.
இது தவிர, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பிம்பத்தை மாற்றி, ஒரு பொறுப்பான அணுசக்தி நாடாகவும், உலகளாவிய அமைதிக்கு வழிவகுக்கும் நாடாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள பாகிஸ்தான் முயல்கிறது. இதுவும் பாகிஸ்தான், அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய முக்கிய காரணம். ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் மீது நம்பிக்கை இல்லாத சூழலில், ஈரானின் நலன்களை அமெரிக்காவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தான், இரு தரப்பிற்கும் நம்பிக்கைக்குரிய பாலமாகச் செயல்படுகிறது.
இந்தியாவுக்கு பிரச்சனை
சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பாகிஸ்தான் ஒரு 'சமாதானத் தூதுவராக' உருவெடுப்பது அதன் சர்வதேச அந்தஸ்தை உயர்த்தும். இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துவிடும். வழக்கமாகப் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கடுமையான போக்கையே கடைபிடித்து வந்துள்ளது என்பதால், இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் கை ஓங்குவது, பாகிஸ்தான் ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் சவாலாக அமையலாம்.
அமைதிக்கு உதவுவதன் மூலம் பாகிஸ்தானிற்கு மீண்டும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நவீன ஆயுதங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது இந்தியாவின் கூடுதல் கவலையாக இருக்கிறது.
பேச்சுவார்த்தை எப்படி போகிறது?
ஈரானை பொறுத்தவரை, அமெரிக்கா 'கேரட் மற்றும் ஸ்டிக்' எனும் போக்கை கடைபிடிக்கிறது. அதாவது, ஒரு கழுதையை வேலை வாங்க வேண்டுமென்றால், அதன் முன்னே ஒரு கேரட்டைக் காட்டி ஆசை காட்ட வேண்டும், அதே சமயம் அது நடக்க மறுத்தால் பின்னாலிருந்து தடியால் அடிக்க வேண்டும். இதைத்தான் 'கேரட் மற்றும் ஸ்டிக்' என்று சொல்வார்கள்.
இப்படியான அணுகுமுறையைதான் ஈரான் விஷயத்தில் அமெரிக்கா பின்பற்றி வருகிறது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு முடியும் நிலையில், காலவரையின்றி போர் நிறுத்தத்தை நீடிப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இது கேட்பதற்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட்டுவிடாது.
ஏனெனில், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை கைவிட அமெரிக்கா மறுத்துள்ளது. எனவே மத்திய கிழக்கு பதற்றமாகவே இருக்கிறது. இதுதான் அமெரிக்கா பின்பற்றும் 'கேரட் மற்றும் ஸ்டிக்' பார்முலா.












Click it and Unblock the Notifications