பில் கிளிண்டன் போல.. டிரம்ப் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! பாலியல் சர்ச்சையால் சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர்கள் பாலியல் சர்ச்சையில் சிக்குவது புதிய விஷயமல்ல. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மோனிகா லெவின்ஸ்கி எனும் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், அவருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி இருக்கையில் இதேபோன்ற ஒரு புகாரில் தற்போது டிரம்ப் சிக்கியிருக்கிறார்.
அமெரிக்காவையே உலுக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் பாலியல் குற்றவாளியின் ஆவணங்கள், அந்நாட்டு நீதித்துறையால் பொது வெளியில், மக்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டது. இதில்தான் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் மீதான புகார்
இப்படி இருக்கையில், இந்த ஆவணங்களில் டிரம்பின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதேபோல, டிரம்ப் மீது பாலியல் புகாருக்கான ஆவணங்களும் வெளியாகியுள்ளன. இவ்வாவணங்களின், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை டிரம்ப் வன்கொடுமை செய்ததாகவும், அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதித்துறை மீது விமர்சனம்
ஆனால் அப்படியான எந்த புகாரும் வரவில்லை, விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமெரிக்க நீதித்துறை மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்த புகார்கள் ஆதாரமற்றவை, பரபரப்புக்காக வெளியாகியுள்ளன என்று நீதித்துறை கூறியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக பேச தொடங்கியுள்ளன. டிரம்ப் அதிபராக இருப்பதால், இந்த குற்றச்சாட்டை நீதித்துறை மூடி மறைக்கிறது என்று விமர்சித்திருக்கின்றனர்.
மோனிகா லெவின்ஸ்கி பெண் விவகாரத்தில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் சிக்கியதை போல டிரம்பும் சிக்குவார் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கின்றனர்.
யார் இந்த மோனிகா லெவின்ஸ்கி?
பில் கிளிண்டன் அதிபராக இருந்த காலத்தில், வெள்ளை மாளிகையில் இளநிலை பணியாளர் பயிற்சி பெற்று வந்தவர்தான் மோனிகா லெவின்ஸ்கி. இந்த காலத்தில்தான் பில் கிளிண்டனுடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. விஷயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்த நிலையில், மோனிகா பென்டகன் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது தோழியுடன் இந்த விஷயத்தை அவர் பகிர்ந்துக்கொண்டார். அதை ரகசியமாக பதிவு செய்த அவரது தோழி, பின்னர் பொதுவெளியில் பகிர்ந்தார்.
பதவி நீக்கம்
அதன் பின்னர் பில் கிளிண்டன் மீது விசாரணை தொடங்கியது. தொடக்கத்தில் அவர் இதை மறுத்தாலும் பின்னர், இதை அவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செனட் சபையில் தீர்மானம் தோல்வியடைந்தது. இதேபோல டிரம்ப் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் சாதாரண ஆள் கிடையாது. பைனான்சியராக தனது தொழிலை தொடங்கிய இவர், பின்னர் பாலியல் தொழிலில் இறங்கினார். குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். சாதாரண குடும்பங்களில் இவரது ஆட்கள் தொடர்பில் இருப்பார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று சொல்லி உதவுவார்கள். பின்னர் அதிகமாக பணத்தை கொடுத்து கல்வி பயிலவும், மாடலிங் போன்ற துறைகளில் கால் பதிக்கவும் உதவுவார்கள்.
சிறுமிகள் விற்பனை
இந்த வருமானத்தை நம்பி தங்கள் வாழ்க்கையை தொடங்கிய சிறுமிகள், ஒரு கட்டத்தில் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இதை மறுக்கும் சிறுமிகளுக்கு பணம் கிடைக்காது. எனவே தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் கால் பதிக்க விரும்பும் சிறுமிகள் வேறு வழியின்றி இந்த கொடுமைக்கு உள்ளாகினர். இப்படித்தான் சிறுமிகளை பணியவைத்து, உலகின் பெரிய பெரிய பணக்காரர்களுக்கும், அமெரிக்காவின் அரசியல் தலைவர்களுக்கும் போக பொருளாக, அவர்களை விற்பனை செய்தார்.
பெரும் புள்ளிகள்
இவர் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கடந்த 2019ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் அதில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. மறுபுறம், அவர் தொடர்பான ஆவணங்களை வெளியிட மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் மூலம், பெரிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில்தான் டிரம்ப் சிக்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications