குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இதை ஈரான் தரப்பு மறுத்துள்ளதுடன், ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இன்னும் காலதாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரானுடனான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கையெழுத்தான உடனேயே, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கும் திறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை நிரந்தரமாகத் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவர சொன்னது எல்லாம் ஓகேதான். ஆனால், இதன் பின்னர் டிரம்ப் பேசியதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது "அமைதி திரும்பிய பிறகு, எங்களது பி-2 (B-2) ரக போர் விமானங்கள் மூலம் ஈரானின் அணுக்கழிவுகளை அழிப்போம்" என்று வாயை விட்டிருக்கிறார். ஒப்பந்தத்திற்கு பேரு என்னவோ அமைதி ஒப்பந்தம்தான். ஆனால், போர் விமானங்கள் குண்டு வீசும் என்று சொல்வதெல்லாம் ஓவராக இல்லையா? என்று ஈரான் மட்டுமல்லாது மொத்த உலக நாடுகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.
ஈரான் மறுப்பு
இப்படி வாயை விட்ட பிறகு ஈரான் என்ன சும்மாவா இருக்கும்? அமைதி ஒப்பந்தமெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று கறாராக பேசியிருக்கிறார். "ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். அது இன்று நடக்காது என்றாலும், வரும் நாட்களில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று கூறினார்.
ஒப்பந்தத்தின் பின்னணி
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் லெபனான் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், ஒப்பந்தத்தின் விவரங்கள் மற்றும் அது கையெழுத்தாகும் தேதி குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவது சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications