டிரம்ப் தன்னை தானே அழித்து கொள்கிறார்.. இந்தியா மீதான வரி ரொம்ப தப்பு! டிரம்பை எச்சரிக்கும் பிரபல வல்லுநர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ளார். இது இரு தரப்பு உறவை ஆபத்தில் தள்ளுவதாக இருக்கிறது. இதற்கிடையே டிரம்ப் பொருளாதார போரை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் டிரம்ப் தன்னை தானே அழித்துக் கொள்வதாகவும் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் எச்சரித்துள்ளார். மேலும், இந்தச் சூழலில் இந்தியா என்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர் சில பாயிண்டுகளை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் தேவையே இல்லாமல் இந்தியா மீது வரிகளை அறிவித்து வருகிறார். முதலில் இந்தியாவுக்கு 25% வரிகளை அறிவித்த டிரம்ப், அதன் பிறகு அந்த வரியை 50%ஆக உயர்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவு இருந்து வந்த நிலையில், அதை ஆபத்தில் தள்ளுவதாக இது இருக்கிறது.

வரி விவகாரம்
இந்த வரியால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வரி விவகாரம் தொடர்பாக அமெரிக்கப் பொருளாதார நிபுணரும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஸ்டீவ் ஹாங்க் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகப் போரைத் தொடங்குவதன் மூலம் அவர் தன்னை தானே அழித்துக் கொள்வதாக ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்தார்.
டிரம்ப்பின் இந்த வரி விதிக்கும் முடிவு முற்றிலும் அபத்தமானது என்றும், அது மணலால் கட்டப்பட்ட வீடு போன்றது என்றும் பேராசிரியர் ஹாங்க் கூறினார். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது முற்றிலும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையே வணிக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பேராசிரியர் ஹாங்க் இந்த கருத்தைக் கூறியிருக்கிறார்.
தன்னை தானே அழிக்கிறார்
பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நான் நெப்போலியன் மன்னர் சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒரு எதிரி தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் போது அதில் தலையிட வேண்டாம் என்று அவர் சொன்னார். டிரம்ப் இப்போது அப்படி தான் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சிறிது காலம் காத்திருந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். டிரம்ப்பின் சீட்டுக் கட்டுகளால் கட்டப்பட்ட வீடு சரிந்துவிடும் என்று நான் நம்புவதால் தான் இதைச் சொல்கிறேன். டிரம்ப்பின் இந்த வரிகள் மணல் வீடுகளைப் போன்றது.
வர்த்தகப் பற்றாக்குறை
அமெரிக்காவின் செலவு மொத்த ஜிடிபியை விட அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் பெரும் வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறது. இதை அடிப்படையாகப் பார்க்கும்போது டிரம்ப் பொருளாதார கொள்கை முற்றிலும் தவறானது. டிரம்ப்பின் வரி விதிப்பு பொருளாதாரம் முற்றிலும் அபத்தமானது" என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் 50% வரி
இப்போது இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரிகளை அறிவித்துள்ளார். ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதாலேயே இந்தியாவுக்கு வரிகளை அறிவிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், இந்தியா இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்றும் இந்தியா தனது தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து சில குறிப்பிட்ட பொருட்களை வாங்குவதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications