இந்தியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க மிஸ்டர் டிரம்ப்! நிருபரிடம் வசமாக சிக்கிய அமெரிக்க அதிபர்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ரஷ்யா வர்த்தகம் குறித்து இந்தியா சமீபத்தில் சுட்டிக்காட்டியது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்துள்ள பதில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த பல ஆண்டுகளாகவே சீராக வளர்ந்து வந்தது. ஆனால், இப்போது அது மோசமான சூழலுக்குத் திரும்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடுகளே அதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

அமெரிக்கா ரஷ்யா வர்த்தகம்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருக்கிறார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாலேயே ரஷ்யாவுக்கு உக்ரைனில் போர் செய்ய நிதி கிடைக்கிறது என்றும் இதனால் போரை நிறுத்த ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறுகிறார்.
இருப்பினும், டிரம்பின் மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அஞ்சவில்லை. நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் மத்திய அரசு கூறியது. மேலும், அமெரிக்கா ரஷ்யா வர்த்தகம் குறித்தும் இந்தியா சுட்டிக்காட்டி இருந்தது.
டிரம்ப் அளித்த பதில்
இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் சந்தித்த டிரம்ப்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப், "எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது.. நான் இதைச் சரிபார்க்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார். இருப்பினும், டிரம்பின் இந்த பதிலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உலக வல்லரசுகளின் தலைவருக்குத் தனது நாடு எதிரி நாட்டுடன் வர்த்தகம் செய்கிறதா என்பது கூட தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் டிரம்ப் வேண்டும் என்றே இந்த விவகாரத்தில் உண்மையை மறைப்பதாகவும் விமர்சித்து வருகிறார்கள்.
டிரம்ப் சொன்ன பதில்
முன்னதாக டிரம்ப் சிஎன்பிசிக்கு அளித்த நேர்காணலிலும் இந்தியாவைச் சாடியிருந்தார். அந்த நேர்காணலில் அவர், "இந்தியா ஒரு நல்ல வர்த்தக நாடாக இல்லை. அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை" என்று கூறியிருந்தார். மேலும், ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதால் கூடுதல் வரிகளை விதிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிப்பது குறித்த கேள்விக்கு டிரம்ப், "நான் ஒருபோதும் எவ்வளவு சதவீத வரியை விதிப்பேன் என்பதைச் சொல்லவே இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நிறைய நடவடிக்கைகளை எடுப்போம். போரை முடிவுக்குக் கொண்டு வருவதே முக்கியம். ரஷ்யாவுடன் விரைவில் ஒரு சந்திப்பு நடக்கிறது. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதே பேச்சுவார்த்தைகளின் குறிக்கோள்" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தியா பதிலடி
அதேநேரம் இந்த விவகாரத்தில் இந்தியா மிகத் தெளிவான ஒரு பதிலை அளித்திருந்தது. சந்தை சூழல்கள் காரணமாகவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க நேர்ந்ததாகவும் அப்போது அதை ஆதரித்த மேற்குலக நாடுகள் அப்போது எதிர்ப்பது சரி இல்லை என்றும் விமர்சித்தது. மேலும், அணுசக்தித் துறைகளுக்கான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சார வாகனங்களுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற முக்கிய பொருட்களை அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியது.












Click it and Unblock the Notifications