உலக பொருளாதாரத்தில் அமெரிக்காதான் நம்பர் 1.. எல்லாம் இந்த சீன வைரஸால் பாழானது- டிரம்ப்
வாஷிங்டன்: உலக பொருளாதாரத்தில் அமெரிக்காதான் எப்போதும் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. தற்போது இந்த சீனாவின் வைரஸ் வந்து எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லாக்டவுன் உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்பே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாகிரட்டிக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
கொரோனா தொடங்கி முதல் விவாதத்திலேயே டிரம்பை விடாமல் தொடர்ந்து ஜோ பிடன் விமர்சனம்
பொருளாதாரம்
அமெரிக்க தேர்தல் நடைமுறைபடி, இருவேட்பாளர்களும் முதல் முறையாக நடத்தும் நேரடி விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் கொரோனா வைரஸ், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
பொருளாதார கொள்கை
டிரம்ப்பின் மிகப் பெரிய கொள்கை பொருளாதாரம்தான். உலக நாடுகளில் கொரோனாவுக்கு முன்பு வரை அமெரிக்காதான் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது. மேலும் என் தலைமையிலான அரசால் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தை கட்டமைத்தோம். தற்போது அதை மீண்டும் செய்வோம் என டிரம்ப் அவ்வப்போது கூறுவது வழக்கம்.
டிரம்ப் பொருளாதாரம்
அந்த வகையில் இன்று ஜோபிடனுடனான விவாதத்தின் போதும் டிரம்ப் பொருளாதாரம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் எனது தலைமையிலான அரசு உலகில் அமெரிக்காவை சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக கட்டமைத்து வைத்திருந்தது. ஆனால் இந்த சீன வைரஸால் அனைத்தும் பாழானது.
சீரழிப்பு
தற்போது லாக்டவுன் முடிந்து நாம் வழக்கமான பணிகளை தொடர்ந்துள்ளோம். தொழில்துறைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. 4 மாதங்களில் 10.4 மில்லியன் மக்களை பணிக்கு திரும்ப வைத்துள்ளோம். இது பெரும் சாதனை இதை யாரும் செய்யவில்லை. இதை ஜோபிடன் ஊற்றி மூடப் பார்க்கிறார். அவர் அதிபரானால் இந்த நாட்டையே சீரழித்து விடுவார் என்றார் டிரம்ப்.
வாழ்வாதாரம்
அப்போது பேசிய ஜோ பிடன், கொரோனா வைரஸை அதிபர் டிரம்பின் தவறான அணுகுமுறையால் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை கொடுக்க நேரிட்டது. இதனால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையை இழந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் வரை உங்களால் பொருளாதாரத்தை சரி செய்ய முடியாது என ஜோபிடன் தெரிவித்தார்.