அப்போ இனிச்சுது.. இப்போ கசக்குதா.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா அதிரடி பதில்
வாஷிங்டன்: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் எதிர்த்து வருகிறது. இதைக் கண்டிக்கும் விதமாக இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தியிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வரி படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபட்டுள்ளன. எங்களை குறி வைப்பதில் நியாயமில்லை என அதிரடியாக கூறியுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

வரி உயர்வு..
இதையடுத்து ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து, பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விசா விவகாரத்தில் இருந்தே இந்தியா மீது நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் இந்தியாவை நேரடியாக விமர்சித்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
மீண்டும் உயர்வு..
இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கைவிடுவது தொடர்பாகவும் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்காவின் வரி உயர்வு திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசும், தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் டிரம்ப் மீண்டும் ஒரு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் போரில் பலியானவர்கள் குறித்து இந்தியாவுக்கு எந்த கவலையும் இல்லை. மேலும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து, அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்." என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் அதிரடி பதில்
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வைத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை குறிவைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
அணுசக்திக்கு தேவையான யுரேனியம் ஹெக்ஸா ஃபுளூரைட் மற்றும் பல்லேடியம் என்ற உலோகத்தை ரஷ்யாவிடம் இருந்துதான் அமெரிக்கா வாங்கி வருகிறது. முன்பு விநியோகங்கள் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டபோது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா, இது உலகளவில் எரிசக்தி சந்தையை வலுப்படுத்தும் என்று வரவேற்றது.
இறக்குமதி கொள்கை முடிவு
இந்திய மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும், எரிசக்தி செலவுகளை மையமாக வைத்தும் தான் இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் முடிவு செய்யப்படுகின்றன. உலகளாவிய பிரச்னைகளை வைத்து மட்டுமே இது முடிவு செய்யப்படுவதில்லை. இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபட்டுள்ளன.
அடிப்படை காரணங்கள் இல்லாமல் இந்தியாவை குறி வைப்பது நியாயம் இல்லை. உலகில் எந்த ஒரு பொருளாதாரத்தை போல, இந்தியாவும் அதன் தேசிய நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும். என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் இந்தியா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து, தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications