"AIஐ பயன்படுத்த வேண்டாம்.." திடீரென தடை போடும் பிரபல நிறுவனங்கள்.. என்ன காரணம் தெரியுமா?
சியாட்டில்: சில வாரங்களுக்கு முன்பு வரை கூட எல்லா நிறுவனங்களுமே தங்கள் ஊழியர்களை AI டூல்களை பயன்படுத்தத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தன. ஏஐ டூல்களை பயன்படுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை கூட சில நிறுவனங்கள் எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறதாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஏஐ பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. பல துறைகளை ஏஐ கருவிகள் மொத்தமாகப் புரட்டிப் போட்டன. உலகின் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஏஐ டூல்களை பயன்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை மாற ஆரம்பித்துவிட்டது.

குறையும் ஏஐ பயன்பாடு
ஒரு காலத்தில் ஏஐ டூல்களை அள்ளி கொடுத்த பெரிய நிறுவனங்கள், இப்போது அவசர அவசரமாக அதன் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. AI தொழில்நுட்பத்தால் ஏதோ பிரச்சினை வந்ததால் பெரிய நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை.. ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதால் அதிக செலவாகும் நிலையில், அதைக் குறைக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அமேசான், வால்மார்ட், சிஸ்கோ, உபெர் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் AI செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஒருவர் இவ்வளவு தான் ஏஐ டூல்களை பயன்படுத்த வேண்டும், தேவையற்ற AI பயன்பாட்டைத் தவிர்ப்பது மற்றும் மலிவான AI மாடல்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
மாற்றம்
சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனங்களின் ஏஐ பயன்பாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாட்பாட்களை தான் ஊழியர்கள் பயன்படுத்தினார்கள். அடிப்படை கேள்விகளைக் கேட்கவே அந்த சாட்பாட்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது அவர்கள் AI ஏஜென்ட்கள் எனப்படும் அடுத்தகட்ட தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளனர். இந்த AI ஏஜென்ட்கள் சிக்கலான மற்றும் பல படிகளைக் கொண்ட பணிகளைத் தானாகவே செய்யும் திறன் கொண்ட அமைப்புகளாகும்.
நிர்வாகப் பணிகளில் சாட்பாட்களை விட இந்த ஏஜென்ட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இவை செலவுகளை அதிகரித்துவிடுகின்றன. பெரிய நிறுவனங்களுக்குமே கூட இந்த ஏஐ கட்டணம் அதிகமாகவே இருக்கிறதாம். மேலும், ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கான கட்டணத்தை மாதாந்திர சந்தாவிலிருந்து டோக்கன் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாற்றியுள்ளன.
அதிகரிக்கும் பில்
அதாவது முன்பு எவ்வளவு பயன்படுத்தினாலும் மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அதை மாற்றி, எவ்வளவு டேட்டாவை ஏஐ டூல்களுக்கு தருகிறீர்களோ.. அதற்கேற்ப கட்டணத்தை வசூலிக்க ஏஐ நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு Prompt, ஒவ்வொரு டாஸ்கிற்கும் இப்போது கட்டணம் கணக்கிடப்படுகிறது. இப்போது பலருக்கும் இந்த புதிய கட்டண முறை பிரச்சினையாக மாறியிருப்பதை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பெரிய நிறுவனங்கள்
உதாரணமாக, உபெர் நிறுவனத்திற்கு ஏஐ டூல்களால் அதிக செலவாகிறதாம். தங்கள் நிறுவனத்தில் AI டூல்களுக்கு ஆகும் செலவை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளதாக உபெர் நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். அதாவது ஏஐ டூல்களுக்கு இவ்வளவு செலவு செய்த பிறகும் அதனால் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பயனுள்ள அம்சங்களை உருவாக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். மேலும், உபெர் ஊழியர்கள் நடப்பு ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஏஐ பட்ஜெட்டையும், நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே, அதாவது வெறும் நான்கு மாதங்களிலேயே முழுமையாக பயன்படுத்தித் தீர்த்துவிட்டதாம்.
இந்த சிக்கல்களைத் தவிர்க்க அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது தனது ஊழியர்கள் பயன்படுத்தும் AI ஏஜென்ட் சிஸ்டத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு ஊழியர் எவ்வளவு தூரம் ஏஐ பயன்படுத்தலாம் என்பதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், அனைத்திற்கும் ஏஐ ஏஜெண்டுகளை பயன்படுத்தாமல் தேவையான மற்றும் குறைந்த செலவை ஏற்படுத்தும் ஏஐ கருவியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துமாறும் ஊழியர்களை அறிவுறுத்துகிறது.
நடவடிக்கை
அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்த செலவுகளைக் குறைக்க வேறு கோணத்தில் அணுகுகின்றன. தேவையில்லாமல் ஏஐ பண்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்று அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்டா நிறுவனமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications